முதல்வர் ஸ்டாலினின் தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று நடிகை ஜோதிகா, முதல்வருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் வசித்து வரும் நரிக்குறவர், இருளர் மக்கள் நீண்ட காலமாக, வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 24 ஆம் தேதி மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப் பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்ற நரிக்குறவப் பெண் அஸ்வினி, விரட்டி அடிக்கப்பட்டார். அப்போது பேசிய  நரிக்குறவ பெண் அஸ்வினி, "அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க" என கேள்வி எழுப்பிய காணொளி வைரலானது. 

இந்த  வீடியோவை கண்ட அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,   நரிக்குறவ பெண் அஸ்வினியுடன் ஒன்றாக அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டார்.  அத்துடன் அங்குள்ள இருளர் மற்றும் நரிக்குறவர்கள் 81 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும்  என்று அஸ்வினி கோரிக்கை வைத்தார். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின் பேரில் ஒரு வாரத்தில்   பூஞ்சேரியில்  சாலை அமைத்தல், மின்கம்பம் அமைத்தல், தெருவுக்குத் தெரு குடிநீர் தொட்டி,  மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.  

j1

நரிக்குறவப் பெண் அஸ்வினி விடுத்த கோரிக்கையின்படி அங்கு பணிகள் முடிந்த நிலையில், கடந்த வியாழகிழமை தீபாவளியன்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு இருளர், நரிகுறவ மக்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதுகுறித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பதிவில், ‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், எளிய பழங்குடி மக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது’ எனத் தெரிவித்திருந்தார். 

மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது… https://t.co/DRLkJLn14n

— Suriya Sivakumar (@Suriya_offl) November 4, 2021

மேலும் ‘எளிய மக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி’ என நடிகர் சூர்யா நன்றி தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், நடிகர் சூர்யாவின் மனைவியும், முன்னணி நடிகையுமான ஜோதிகா,  நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பாராட்டியுள்ளார்.

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்ற நீங்கள் முடிந்தவரை சிறப்பாக உழைத்து வருகிறீர்கள். அதனை உடனடியாக செய்தும் வருகிறீர்கள். இந்த தலைமைப் பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்பதைக் காட்டுகிறது.

J2

கல்வித்துறையில் நீங்கள் கொண்டுவரும் நேர்மறையான மாற்றம், ஒரு குடிமகளாக எனக்கும் சரி, அகரம் அமைப்பிற்கும் சரி கடந்த 16 வருடங்களில் பார்க்காதது. குறவர் மற்றும் இருளர் மக்களுக்கு நீங்கள் வழங்கிய பட்டா, சாதி சான்றிதழ், மற்றும் அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை நம் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கையும் ஏற்படுத்தும் அளவுக்கு இருக்கிறது.

முதலும் முடிவுமாக நாம் இந்தியர்கள் என்ற அம்பேத்கரின் வார்த்தையை நிஜமாக்கியதற்கு நன்றி. உங்களுக்கு ஒரு குடிமகளாக மட்டும் அல்ல, தியா மற்றும் தேவ்வின் அம்மாவாக எனது மரியாதையும் நன்றியும் கூறிக்கொள்கிறேன்' என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Jyotika (@