ஜெய்பீம் திரைப்படத்தில் மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார். ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது.

கருணாநிதி காலத்தில் கட்டபட்ட வள்ளுவர் கோட்டம் நீர் நிலையை மூடி அதன் மீது கட்ட பட்டது. சட்டத்திற்கும் நியாங்களுக்கும் மரியாதை கிடையாது. சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு தலா 5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் செலுத்த வேண்டும்.

h1

டெல்டா மாவட்டங்கள் கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோவிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை மட்டும் செய்தது. அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திமுக அரசு கோயிலில் கொள்ளை அடிக்கக்கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ; கோயில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

கோவில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது. கோவில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழகம் முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதை சந்திக்க தயார்.

ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால், அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? 

h2

அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று எங்களுக்கு தெரியும். நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா, இந்து மக்கள் கோவிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி பேசி இருக்கலாம். வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்லவில்லை, ஏனென்றால் அது அவர்களின் மதம்.

ஜெய்பீம் திரைப்படம் வன்னியர் குல சமுதாயத்திற்கும், பட்டியல் சமுதாயத்திற்கும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என்று எச். ராஜா காட்டமாக தெரிவித்துள்ளார்.