கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவருக்கு ஆனந்த் மகேந்திரா தனது நிறுவனத்தில் வேலை வழங்குவதற்கு பரிந்துரைத்துள்ளார்.

anand mahindra

மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா. இவர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர். சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது பொதுமக்களின் புதிய முயற்சிகளை பாராட்டி  அவர்களை கவுரவிக்கும் வகையில் ஆச்சரியப்படுத்தும் பரிசு பொருட்களை வழங்குவார்.

இந்நிலையில் அவர் தற்போது தனது டுவிட்டர்  பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்கூட்டரை தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து, அதனை ஓட்டி வருகிறார். அதனை கண்ட இருவர் அவரிடம் சென்று  பேசுகின்றனர். அவர்கள் அவரிடம் வாகனத்தை ஸ்டார்ட் செய்தும் காண்பிக்க சொல்ல அவரும் ஸ்டார்ட் செய்து காண்பிக்கிறார்.

அதனைத்தொடர்ந்து  பேசிய அந்த மாற்றுத்திறனாளி தான் கிட்டத்திட்ட ஐந்து வருடங்களாக இந்த வண்டியை ஓட்டி வருவதாகவும் தனக்கு மனைவி  இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான தந்தை இருப்பதாகவும் அவர்களுக்காக தான் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துவிட்டு செல்கிறார். இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மகேந்திரா இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது. எங்கிருந்து வந்தது போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் இந்த நபரை கண்டு நான் ஆச்சரியமடைகிறேன். காரணம் தன்னிடம் உள்ள குறையை குறையாக கருதாமல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதற்கு நன்றி உள்ளவராக இருக்கிறார். இவரை எனது நிறுவனத்தின் மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்டில் பிசினஸ் அசோசியேடில்  சேர்த்துக்கொள்ள  பரிந்துரை செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் மராட்டியாவை சேர்ந்த தத்தாத்ராய லோகர் என்ற நபர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சொந்தமாக ஒரு காரை வடிவமைத்து இருந்தார். அவரை பாராட்டி கவுரவிக்கும் வகையில் ஆனந்த் மகேந்திரா அவருக்கு ஒரு பொலேரோ காரை இலவசமாக வழங்கினார். இந்த நிலையில் தற்போது மாற்றுத்திறனாளி நபருக்கு இவர் வேலை கொடுத்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் ஆனந்த் மகேந்திராவை பாராட்டி வருகின்றனர்.