“தன்னைத் தானே திருமணம் செய்துக்கொள்ள போவதாக” இளம் பெண் ஒருவர் அறிவித்த நிலையில், “இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது என்றும், இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறைவதுடன், புனிதமான கோயில்களில் இது போன்ற திருமணங்களை அங்கு நான் நடத்த விடமாட்டேன்” என்று, பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் போர்கொடி தூக்கி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

அதாவது, குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஷாமா பிந்து என்ற பெண், அங்குள்ள எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி படித்து, பட்டம் பெற்றிருக்கிறார்.

இந்த பெண், அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், சக இந்திய பெண்களைப் போலவே, இந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திக்கிறார். அதன் படி, வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள திருமணத்திற்காக இவர் தயாராகி வருகிறார். 

அத்துடன், தனது திருமணத்திற்காக, அந்த பெண் பிரேத்யேக ஆடை உள்ளிட்ட அனைத்து சம்பிராதாயங்களையும் முறைப்படி ஏற்று உள்ளார்.  ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஒரே ஒரு விசயம் மட்டும் இவர் திருமணத்தில் கிடையாது. 

அது வேறொன்று இல்லை, தாலி கட்ட மணமகன் மட்டும் இவரது திருமணத்தில் இல்லை. ஆனால், இந்த பெண்ணின் திருமணத்தில் பங்கேற்க அப்பகுதியில் உள்ள ஊர் மக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்குமு் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, அந்த இளம் பெண், தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

இப்படியாக, இளம் பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.

இந்த திருமணம் பற்றி மனம் திறந்து பேசிய அந்த இளம் பெண் ஷாமா பிந்து, “சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். ஆனால், திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும்,  நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால் தான், நான் என்னையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன்” என்று, விளக்கம் அளித்து உள்ளார்.

“நம் நாட்டில் சுய அன்புக்கு ஒரு முன் மாதிரியாக நான் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். சுய திருமணம் என்பது தனக்காக நிபந்தனையற்ற அன்பு என்றும், இது சுயமாக ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட” என்றும், அவர் விளக்கம் அளித்து உள்ளார். 

“பொது மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன். அதனால், என்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்றும், அந்த இளம் பெண் கூறியுள்ளார்.

மேலும், “பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமணத்தில், மந்திரங்கள் ஓத, மணமகள் அலங்காரம் உள்ளிட்ட  வழக்கமான திருமண சம்பிரதாயங்கள் பின்பற்றப்படும் என்றும், திருமணம் முடிந்ததும் நான் தேனிலவு கொண்டாட தன்னந் தனியாக கோவா செல்ல இருக்கிறேன்” என்றும்,  ஷாமா பிந்து கூறியிருந்மார். இது, இணையத்தில் பெரும் வைரலானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்தத திருமணம் குறித்து கண்டனம் தெரிவித்து உள்ள குஜராத் பாஜக நகரப் பிரிவின் துணைத் தலைவர் சுனிதா சுக்லா “பிந்து மனநிலை சரியில்லாதவர்” என்று, குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “இது போன்ற திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது என்றும், இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறையும்” என்றும், அவர் கவலைத் தெரிவித்து உள்ளார். 

மேலும், “அந்த பெண், தன்னையே திருமணம் செய்து கொள்ள எந்த கோவிலிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்து கலாசாரத்தில் ஒரு ஆண் ஆணையோ அல்லது ஒரு பெண் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை” என்றும், அவர் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

ஆனால், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய இளம் பெண் ஷாமா பிந்து, “நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம் என்பதால், நான் இந்த முடிவை எடுத்தேன்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“மக்கள், தாங்கள் நேசிக்கும் நபரை திருமணம் செய்கின்றனர் என்றும், நான் என்னையே நேசிக்கிறேன் என்பதால் தான் நான் இந்த திருமணம் முடிவுக்கு வந்தேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

குறிப்பாக, “சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாக கருதலாம். ஆனால், எனக்கு என் விருப்பம் மிக முக்கியம் என்றும், எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கி உள்ளனர்” என்றும், அந்த பெண் உறுதியுடன் கூறியுள்ளார். தற்போது, இதுவும் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.