“அதிமுக பொதுச் செயலாளர் முதல், ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் ஏற்றது வரை” சசிகலா கடந்து வந்த பாதை பற்றி தற்போது பார்க்கலாம்.. 

- கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா காலமானர்.

- இதனையொட்டி, அன்றிரவே அவசர அவசரமாக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி, சட்டமன்ற குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தைத் தேர்ந்தெடுத்தனர். 

- அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் அப்போது பதவி ஏற்றார்.

- அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் செங்கோட்டையன், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவை சந்தித்து கட்சியை வழி நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

- இந்த கோரிக்கையை ஏற்று டிசம்பர் 29 ஆம் தேதி, அதிமுக வின் பொதுக் குழு கூட்டப்பட்டு ஒருமனதாகக் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

- இதன் மூலமாக, அதிமுக வின் 6 வது பொதுச் செயலாளராக சசிகலா அப்போது பதவி ஏற்றார்.

- அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் மூத்த தலைவர்களான சைதை துரைசாமி, தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலாவை முதலமைச்சராகப் பதவி ஏற்க  வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர். 

- இதன் காரணமாக, அப்போது சசிகலாவை முதலமைச்சராக முன்னிறுத்தி அக்கட்சிக்குள் முழக்கங்கள் எழுந்தன. அந்த குரல் பலமாக ஒலிக்கத் தொடங்கிய முதல் அதிமுகவில் குழப்பங்களும், சச்சரவுகளும் கூடவே எழுந்தன. 

- கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏ க்களிடம் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக, சசிகலாவை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வதாகக் கையெழுத்து வாங்கப்பட்டது.

- அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததும், எந்த நேரத்திலும் சசிகலா முதலமைச்சராகப் பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

- அப்போதைய தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகப் பதவி வகித்த வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்தார். இதன் காரணமாக, சசிகலாவின் பதவியேற்பு விழா தள்ளிபோய்கொண்டே இருந்தது.

- கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், ஜெயலலிதாவின் சமாதிக்கு திடீரென்று வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கு 40 நிமிடங்கள் கண்களை மூடி, அமர்ந்து தியானம் செய்தார்.
 
- அப்போது, தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டதாக ஓபிஎஸ் கூறியது தமிழக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

- அந்த நேரத்தில், ஓ.பன்னீர்செல்வத்துடன் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 10 எம்எல்ஏ க்கள் அணி வகுத்து ஆதரவு கொடுத்தனர். 

- அதன் தொடர்ச்சியாக, மறு நாள் அதிமுக தலைமையகத்தில் எம்எல்ஏ க்கள் மத்தியில் உரையாற்றிய சசிகலா, “துரோகங்கள் ஒரு போதும் வென்றது கிடையாது” சூளுரைத்தார். 

- மேலும், “இது நாள் வரை ஜெயலலிதாவிற்காக வாழ்ந்ததாகவும், இனி அவரது கனவுகளுக்காக வாழ்வேன்!” என்றும், சசிகலா அதிரடியாக அறிவித்தார்.

- அத்துடன், சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏ க்கள் 130 பேரை, அணி தாவாமல் இருக்க சென்னை அருகில் உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தார். 

- கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. 

- இதன் காரணமாக, அதிமுக வின் சட்டப் பேரவை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

- சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சரணடையப் பெங்களூரு புறப்படும் முன்னதாக, ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதியில் கையால் அடித்து சத்தியம் செய்து, கூடவே சபதமும் எடுத்துக் கொண்டார்.

- கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி, அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணி நீக்கியது. 

- இதனை எதிர்த்து, சிறையில் இருந்தபடியே சட்டப் போராட்டத்தை நடத்தி வந்தார் சசிகலா.

- அதைத்தொடர்ந்து, பெங்களூரு சென்ற சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 4 ஆண்டுகள் சிறை வாசத்தை அனுபவித்து விட்டு, தற்போது சென்னை திரும்பிக்கொண்டு இருக்கிறார்.