தமிழகத்தில் இன்று முதல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்பட்டு உள்ள நிலையில், 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. 

கொரோனா வைரஸ் பெருந் தொற்று காரணமாகப் பள்ளி - கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டன. 

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக, முதலில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

தற்போது, அதன் தொடர்ச்சியாகப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுத இருக்கும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 
 
இதனால், மற்ற கல்லூரி மாணவர்களும், பள்ளிகளில் பிற வகுப்பு மாணவர்களும் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பு மூலமாகவே பாடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் தான் கலை, அறிவியல், தொழில் நுட்பம், என்ஜினீயரிங் பாடப் பிரிவுகளில் அனைத்து மாணவர்களுக்கும் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. 

மேலும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தொடர்ந்து, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. 

அதன் படி, அந்த மாணவ - மாணவிகளுக்கு இன்று முதல் முறைப்படி பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால், காலை முதலே அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் முதல் நாளான இன்று மிகுந்த ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அதே போல், இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 9 மற்றும் 11-ம் வகுப்புகளைப் பொறுத்தவரையில், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் சில வகுப்புகள், பாடப் பிரிவுகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் செயல்படலாம் என்றும், காலை - மாலை என 2 ஷிப்டு முறையில் பாடப் பிரிவுகள் செயல்படலாம் என்றும், கல்வித் துறை கூறியுள்ளது. 

அந்த வகையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 

இவற்றுடன், போதுமான ஆசிரியர்கள், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் வழக்கம் போல் இன்று முதல் முறையான வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இதனால், சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, மாணவ - மாணவிகள் நேரடி வகுப்பறை அனுபவத்தை இன்று முதல் மீண்டும் பெறுகின்றனர்.

அதே போல், கல்லூரிகளைப் பொறுத்த வரையில் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்த அனுமதி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றுடன், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும், உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. 

இதற்கான பணிகளில் சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தீவிரமாக ஈடுபட்டு, மாணவ - மாணவிகள் பாதுகாப்பான முறையில் வகுப்புகளுக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில கல்லூரிகள், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளையே தொடர திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.