அம்மா உணவகத்தின் பெயர் பலகையை கிழித்தவர்களை திமுகவிலிருந்து நீக்க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.

சென்னை முகப்பேர் கிழக்கு ஜே.ஜே. நகர் பகுதியில் திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அந்த வழியாகச் சென்று உள்ளனர். 

அப்போது, திடீரென்று அங்கிருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகையை வெளியே எடுத்து வந்து, சாலையில் வீசி எரிந்து உள்ளனர்.

அத்துடன், அம்மா உணவகத்தில் நுழைந்து அத்து மீறி அவர்கள் தாக்குதல் நடத்தியதோடு, “அம்மா உணவகம் என்ற பெயர்ப் பலகை தொங்க விடக்கூடாது” என்று, அங்கிருந்த ஊழியர்களை அவர்களில் இருவர் கடுமையாக எச்சரித்துச் சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, திமுகவினர் இருவர் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ, இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.  
 
இந்த நிலையில், “அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டு உள்ளார்” என்று, திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” என்று கூறியுள்ளார்.

மு.க ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரின், இந்தப் பதிவை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து பாராட்டியுள்ளார்.

எனினும், சென்னையில் அம்மா உணவகம் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிவிட்டரில் #அம்மா உணவகம் காப்போம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக சென்னையில் சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், “ அம்மா உணவகத்தின் பெயர் பலகையைக் கிழித்தவர்களை திமுகவிலிருந்து நீக்கி உள்ளதாகவும், நீக்கப்பட்ட இருவருக்கும் கட்சியில் எந்த பதவியும் வழங்கப்பட வில்லை” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “சம்மந்தப்பட்ட இருவர் மீதும் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்றும், அவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், அவர் கூறினார்.

முக்கியமாக, “கைதான இருவர் மீதும் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது” என்றும், திமுக எம்.எல்.ஏ. மா.சுப்ரமணியன், தெரிவித்து உள்ளார்.