தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் வருகிறார். 


இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் அரசு கைவிடுகிறது என்று ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 17,686 பேர் மீது தொடரப்பட்ட  408 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். 


துறை ரீதியான நடவடிக்கை, வழக்குகளைத் திரும்பப் பெறக்கோரி, சங்கங்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி. மேலும் அவர் , ‘’ ஒருபோதும் அதிமுக அரசு , ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்தது இல்லை. அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை கோரியவுடனே , இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஊதியக் குழுவை அமைத்து, ஒரே மாதத்தில் ஊதிய உயர்வை வழங்கியது அதிமுக அரசு  தான்” என்று தெரிவித்துள்ளார்.