வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனால், விவசாய புரட்சி முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாக 3 புதிய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டதிட்டங்கள் படி, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு போன்றவற்றை ஒழித்து விடும் எனவும், விவசாய துறையைப் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்த்துவிடும் எனவும் விவசாயிகள் பகிரங்கமாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி, தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், இந்த 3 புதிய சட்டங்களையும் திரும்பப்பெறக்கோரி, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் முற்றுகையிட்டுத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முக்கியமாக, டெல்லியின் எல்லைப்பகுதிகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் 35 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டெல்லி வாழ் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போக்குவரத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும், இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு ஏற்கனவே 5 சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தி இருக்கிறது. இதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒரு முறை விவசாய பிரதிநிதிகள் சந்தித்து பேசி பார்த்தார். ஆனால், இந்த பேச்சு வார்த்தைகளில் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தது. 

அத்துடன், “3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்” என்பதிலேயே விவசாயிகள் கடைசி வரை உறுதியாக இருப்பதால், பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன. 

இதைத்தொடர்ந்து, அடுத்த சுற்று பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தது. அதன்பேரில் கடந்த 29 ஆம் தேதி நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக அரசுக்கு கடிதமும் எழுதினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையை இன்று மதியம் 2 மணி அளவில் நடத்துவதாக மத்திய அரசு கூறியிருந்தது. 

இன்று மதியம் 2 மணிக்கு விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்குமாறு விவசாய அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பும் விடுத்துள்ளது. இது தொடர்பாக சுமார் 40 அமைப்புகளுக்கு மத்திய வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் கடிதம் எழுதியிருந்தார்.

குறிப்பாக, இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

எனினும், இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கான வழி முறைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ 
உறுதி போன்றவை இந்த பேச்சு வார்த்தையின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன், விவசாயிகளின் நலன் கருதி மின்சார திருத்த சட்டம் 2020ஐ திரும்பப்பெறுவது குறித்தும் இந்த பேச்சு வார்த்தையில் பேசப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். 

அதே போல், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று சிங்கு, திக்ரி பகுதிகளில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்திருந்தனர். ஆனால், மத்திய அரசுடன் இன்று பேச்சு வார்த்தை நடத்துவதையொட்டி அந்த பேரணியை அவர்கள் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். இதனால், மத்திய அரசுடனான பேச்சு வார்த்தைக்கு எந்தவித இடர்பாடுகளும் நேராது என்றும், அவர்கள் கூறியுள்ளனர்.

மிக முக்கியமாக, பஞ்சாப் மாணவிகள் பலர், சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

அத்துடன், டெல்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு வசதியாக இலவச வை பை வசதியை வழங்க, ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஒருவேளை, இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று கூடி முக்கிய முடிவு எடுக்கும் என்றும், சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மேலும், “விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்ட தலைவர்களை இந்த பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு ஈடுபடுத்தி இருக்க வேண்டும்” என்றும், சரத்பவார் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.