“இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக நேற்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த், “கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று, கூறினார். 

இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி, எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். என்னை மன்னியுங்கள். என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்கவிரும்பவில்லை” என்று, ரஜினிகாந்த் மிகவும் உருக்கமாகக் கூறியிருந்தார். 

குறிப்பாக, “எனக்கு இது வரை பக்க பலமாக இருந்த தமிழருவி மணியனுக்கு நன்றி” என்றும், அவர் கூறியிருந்தார். நேற்றைய தினம் தமிழகத்தின் தலைப்புச் செய்தியாக, இந்த செய்தி மாறிப்போனது. 

இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பின்வாங்கல் குறித்து பலரும் பலவிதமாகக் கருத்து கூறி வருகின்றனர். முக்கியமாக, ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில், நடிகர் ரஜினிக்கு இது வரை அரசியல் தொடர்பான மிக முக்கிய ஆலோசனைகளை வழங்கி வந்த காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி 
மணியன், “இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் ஒரு போதும் அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று, அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொது வாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது. சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்பு வாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. 

இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒரு போதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில் தான் நடந்து கொண்டிருக்கிறது. 

மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றது தான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மன நோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என் மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டன. 

மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோத்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன்.

இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன். தி.மு.க. விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் 
வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்.” என்று, மிகவும் உருக்கமாகத் தமிழருவி மணியன் கூறியிருக்கிறார். 
 
தற்போது, இந்த அறிக்கை இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.