ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 50 வது நாளாக தொடரும் நிலையில், “உக்ரைன் வீரர்கள் 1000 பேர், ரஷ்யாவிடம் சரணடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் 50 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி உள்ள ரஷ்ய படைகள், அங்கு பலவிதமான போர் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இதில் உச்சக்கட்ட கொடூரமாக, “உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களது உடலில் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள் முத்திரை குத்தி அடையாளம் படுத்துவது தொடர்பான படங்களும் வெளியாகி” உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்துடன், உக்ரைன் வீதிகளில் பல 100 க்கணக்கான அப்பாவி மக்கள் சித்ரவதை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியான நிலையில், ஐ.நா.வில் இருந்து ரஷ்யாவை தற்காலிக நீக்கம் செய்து, ஐ.நா. சபை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது.

இந்த சூழலில் தான், “ரஷ்யப் படைகளின் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக” உக்ரைன் அதிர்ச்சி தரும் அறிவிபபை நேற்றைய தினம் வெளியிட்டது.

அதன் படி, “உக்ரைனின் தலைநகர் கீவ் தவிர மற்ற நகரங்களிலும் ரஷ்யப் படைகள் பெரிய அளவில் தாக்குதலை நடத்தி வருவதாகவும், உக்ரைனின் புச்சா நகரில் மட்டும் குறைந்தது 400 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டு உள்ளனர்” என்றும், குற்றம்சாட்டி உள்ளது.

குறிப்பாக, “உக்ரைன் மரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும்” குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இப்படியான சூழலில் தான், உக்ரைன் மீது ரஷ்யா இன்றுடன் 50 வது நாளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரை, முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும், அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்து வருகின்றன. என்றாலும், உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷ்ய படைகள், தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.  இந்த போரில், முன்னதாக கருங்கடலில் நிற்க வைக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் மாஸ்க்வா மீது, உக்ரைனின் 2 நெப்டியூன் ஏவுகணைகளை ஏவியது. இதனால், ரஷ்யாவின் கருங்கடல் போர்க்கப்பலபானது, மிக கடுமையாக சேதமடைந்து உள்ளது. இதனையடுத்து, அதன் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன. 

அதே நேரத்தில், ரஷ்ய படையினரால் கொன்று புதைக்கப்பட்ட, உக்ரைன் நாட்டின் கோஷ்டொமெல் நகர மேயரின் உடல் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் தான், உக்ரைன் நாட்டில் உள்ள மரியுபோல் நகரில் 1000 க்கும் மேற்பட்ட உக்ரைன் கடற்படையினர், ரஷ்யாவிடம் சரண் அடைந்து உள்ளதாக, செசன்யாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ், சமூக வலைத்தளங்களில் கூறி உள்ளார்.

அதே போல், மரியுபோல் நகரை கைப்பற்றி விடும் நிலையில் ரஷயா இருக்கும் சூழலில், சுமார் 1026 உக்ரைன் படை வீரர்கள், தங்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, சரண் அடைந்து உள்ளதாக” ரஷ்யாவும் கூறி உள்ளது. ஆனால், இந்த தகவலை உக்ரைன் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த சூழலில் தான், உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க முன்வந்து உள்ளது. இது தொடர்பாக பேசிய ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ மேஜரும், மேடிசன் பாலிசி மன்றத்தில் நகர்ப்புற போர் நிபுணருமான ஜான் ஸ்பென்சர், “அமெரிக்கா உக்ரைனுக்கு பீரங்கி மற்றும் பீரங்கி குண்டுகளை அனுப்புவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக” தெரிவித்து உள்ளார்.