ட்விட்டர் நிறுவனத்தின்  இயக்குநர்கள் குழுவில் இணைய விருப்பமில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.  

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின்  தலைமை செயல் அதிகாரியும்,  உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்  இருக்கும் எலான் மஸ்க்  அண்மையில் சத்தமில்லாமல் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார். டிவிட்டர் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரராக உருவெடுத்துள்ள எலான் மஸ்கை, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் சேர்ப்பது குறித்து   ஆலோசனை செய்யப்பட்டு வந்தது.  

இந்நிலையில்  கடந்த வாரம் டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் நிர்வாகக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எலான் மஸ்கை  நிர்வாகக் குழுவில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.   ஆனால் அதற்கு  எலான் மஸ்க் தற்போது  மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனை ட்விட்டர் நிறுவனமே அறிவித்துள்ளது.  இதுகுறித்து டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் தனது டிவிட்டர் பதிவில், எலான் மஸ்க், டிவிட்டர் நிர்வாகக் குழுவில் சேரும் வாய்ப்பை மறுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.   அவர் எடுத்த முடிவு அதிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து டிவிட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் சேர்வது பற்றிப் பல முறை ஆலோசனை செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை எலான் மஸ்கிற்கு  டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இடம் அளிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அன்றைய தினமே  நாளில் எலான் மஸ்க் இந்த வாய்ப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும்  பராக் அகரவால்  பதிவிட்டுள்ளார். மேலும், எலான் மஸ்க் எங்களுடைய மிகப்பெரிய பங்குதாரர் என்றும், அவருரைய கருத்துகளுக்கு திறந்த மனதுடன் நாங்கள் வரவேற்போம் என்றும் பராக் அகரவால் விளக்கியுள்ளார்.