இலங்கையில்  ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை மக்கள் உயிர் பிழைப்பதற்காக தமிழகம் நோக்கி வர துவங்கியுள்ளனர்.

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.
 
இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கூறியதாவது: இந்நிலையில் பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டி மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாகக்கூறி அவர் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக்கடிதத்தில்  உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்காக மக்கள் வரிசையில் நிற்பது வேதனை அளிப்பதாக ரோஷன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி, அந்நாட்டு மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக  பல்வேறு பகுதிகளில் அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்  அமைச்சர் ரணசிங்கே பதவி விலகியது இலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால், உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. 

இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் 

அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் உடனடியாக பதவி விலகக்கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர்.

மேலும் தொடர்ந்து, சர்வதேச நிதி அமைப்பின் உதவியை இலங்கை நாடியுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டுக் கடன்களை இலங்கை அரசு திருப்பிச் செலுத்தும் திறன் குறைந்துள்ளதாக கவலைகள் எழுந்துள்ள நிலையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அரிசி ஏற்றுமதியில் உலகின் நம்பர் ஒன் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு உணவு, மருந்து, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ள கொழும்பு நகரில், அரிசி விலையை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து இந்தியா கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசின் வர்த்தக கழகத்திற்கு அரிசி அனுப்பி வைக்கும், பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.வி.கிருஷ்ண ராவ் இது குறித்துப் பேசுகையில், “நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வெகு எளிதாக மாற்றம் செய்யக் கூடிய கண்டெய்னர்களில் முதலில் அரிசியை நிரப்பி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில், இலங்கைக்கு வெகு விரைவாக அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்றும், பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் வாரக் கணக்கில் ஆகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையும் வாங்க முடியாத விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இலங்கை மக்கள்  தவித்து வருகின்றனர். இதனால் வேறு நாட்டிற்கு சென்று உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என நினைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துள்ளனர். அதே நேரத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள் படகுகள் மூலம் அகதிகளாக தமிழகம் வர தொடங்கியுள்ளனர். இன்று மட்டும் 19 பேர் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனர். தங்களுக்கு உண்ண உணவும், குழந்தைகளுக்கு பால் பொருட்களும் கிடைக்கவில்லையென்று வேதனை தெரிவித்தவர்கள், தமிழகத்தை நம்பித்தான் கைக்குழந்தைகளோடு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் நாள் தோறும் தமிழகத்தை நோக்கி வரும் இலங்கை தமிழர்களை மீட்கும் கடலோர காவல்படையினர், இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தி மண்டபத்தில் உள்ள மறுவாழ்வு முகாமில் தங்கவைத்துள்ளனர். இலங்கையில் நடைபெற்ற போரின் போது நாள் தோறும் ஏராளமான மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள தமிழகத்தை நோக்கி வந்தனர். போர் முடிவடைந்த பிறகு இலங்கையில் இருந்து தமிழகம் வரும் அகதிகள் எண்ணிக்கை முற்றிலுமாக நின்றிருந்தது. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உயிரை பணயம் வைத்து படகுகளில் தமிழகத்தை நோக்கி வரும் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை  மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர்.