டெல்டா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்று இங்கிலாந்தில் நடந்த 2 ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா முதல் அலை முடிந்து சற்று ஓய்ந்தநிலையில், ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா இரண்டாம் அலையை உருவாக்கியது.

இந்த இரண்டாம் அலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பலாம் என நினைத்தபோது கொரோனாவின் அடுத்த உருவமான ஒமிக்ரான் வைரஸ் உலகின் பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. 

omicronபுதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் குறைவான நாட்களிலேயே அதிக நாடுகளில் பரவி உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

ஒமிக்ரான் வகை வைரஸ் கவலைக்குரிய திரிபு என உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தி அறிவித்துள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் முன்பு உருவான டெல்டா வகை கொரோனா வைரசை விட குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது என்று ஆரம்ப கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்த தருணத்தில் ஒமிக்ரான் வைரஸ் பற்றி உலகமெங்கும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் இங்கிலாந்தில் 2 ஆய்வுகள் நடந்துள்ளன.

லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள்:-

“ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் ஒரு இரவோ அல்லது அதற்கு அதிகமாகவோ தங்க வேண்டியது வருவது, டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் 40 முதல் 45 சதவீதம் குறைவாக உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்று வந்து மீண்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்தவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு 50 முதல் 60 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.

omicron variantடெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு குறைவு” என்பதற்கு எங்கள் ஆய்வு சான்றாக அமைகிறது என்று இம்பீரியல் கல்லூரி ஆராய்ச்சியாளர் நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் ஒமிக்ரான் பற்றி ஆராய்ந்து உள்ளனர். இந்த ஆய்வில் தெரியவந்துள்ள தகவல், டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் பாதிப்பில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது மூன்றில் இரு பங்கு குறைவுதான் என்பதாகும்.

ஒமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென் ஆப்பிரிக்காவில் வெளியாகி உள்ள தரவுகள், இந்த வைரசால் பாதிக்கப்படுகிறவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்பு 80 சதவீதம் குறைவு என காட்டுகின்றன.

மேலும் டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் நோய் தீவிரம் ஆவதற்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு என்றும் காட்டுகின்றன. எனவே டெல்டா வைரசுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பின் தீவிரம் லேசானதுதான் என்ற கருத்து வலுத்து வருகிறது. எனினும் தடுப்பூசி செலுத்தும் பணியை உலக நாடுகள் தீவிரமாக்கியுள்ளன.