இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அவரது இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

imran khan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். அப்போது அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது. பெண்கள் கல்வி பயில அனுமதிக்காமல் இருப்பது ஆப்கானிய கலாச்சாரம் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை கூறியதாக அவர் மீது கண்டனங்கள் எழும்பி உள்ளன.

இந்நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்ற பிற இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் அவரது இந்த கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின் கடைகளில் உள்ள விளம்பரப் படங்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை நீக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து 2021-ம் ஆண்டு தான் ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களுக்கு மிக துயரமான ஆண்டாக அமைந்துள்ளது என்று ஐ.நா.சபையின் மனித உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தலீபான்கள் ஆட்சிக்கு பின் ஆப்கானிஸ்தானில் அரங்கேறும் துயரங்களிலிருந்து, சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை பாகிஸ்தான் முன்னிறுத்தி வரும் வேளையில் பாகிஸ்தான் பிரதமரின் இந்த சர்ச்சை கருத்து சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.