மதுரையில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய் சேயை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

driver

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் வேல்பாண்டி  இவரின் மனைவி சரண்யா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக மதுரை ராஜாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுயிருந்தார்.


இந்த நிலையில் சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மையத்திற்கு பரிந்துரை செய்ததுள்ளனர். அதன் பேரில் டாக்டரின் பரிந்துரைப்படி  உடனடியாக நிறைமாத கர்ப்பிணியான சரண்யாவை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் அவரை ஏற்றிக்கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் மதுரை ரிங்ரோடு சாலையில் செல்லும் போது நிறைமாத கர்ப்பிணியான சரண்யா வலி தாங்கிக்கொள்ள முடியாமல் வலியில் துடி துடித்து உள்ளார். இதனையடுத்து செல்லும் வழியில் ஆவின் பால்பண்ணை அருகில் சாலை ஓரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு நிறைமாத கர்ப்பிணிக்கு மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் பிரசவம் பார்த்து உள்ளார்.


அதனைத்தொடர்ந்து  சரண்யாவுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தாயும், சேயும் நல்ல உடல் நிலையோடு இருக்கும் நிலையில் இருவரும் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் 108 ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் மற்றும் வாகன ஓட்டுநர் இருளாண்டி ஆகியோருக்கு பொதுமக்களும் மருத்துவர்களும்  தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.