தருமபுரி பாலக்கோடு அருகே தாலிகட்டும் நேரத்தில் மணமகன் குடித்து விட்டு போதையில் மயக்க நிலையில் இருந்ததால், மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற இளைஞர்.  32 வயதான சரவணன் கூலி வேலை செய்து வருகிறார்.  

இந்நிலையில் சரவணனுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நேரு நகரை சேர்ந்த லட்சுமி (22) என்ற பெண்ணிற்கும், திருமணம் நிச்சயக்கபட்டிருந்தது.

திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து திருமண ஏற்பாடுகளும் மும்முரமாக நடந்து கொண்டிந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே வஜ்ஜிரபள்ளம் என்ற கிராமத்திலுள்ள ஈஸ்வரன் கோவிலில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணமும் நடைபெறவிருந்தது. 

இந்நேரத்தில் திருமண நாளன்று மணப்பெண்ணின் உறவினர்கள் கோவிலில் சென்று பார்த்தப்போது, சம்மந்தபட்ட மாப்பிள்ளை மற்றும் உறவினர்களையும் காணவில்லை. இதனைக் கண்டு மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர், 

இதனையடுத்து மணமகன் சரவணன் வீட்டிற்கு சென்று பார்த்தப்போது, மது குடித்த மயக்கத்தில் சரவணன் கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மணமகள் லட்சுமி இந்த குடிகார மணமகனும், வேண்டாம், திருமணமும் வேண்டாம் என மாலையை கழற்றி வீசிவிட்டதாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குண்டான செலவுகளை மட்டும் திரும்ப செலுத்தக் கோரி மணமகளின் தாய்மாமன் பாலு மாரண்டஅள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

wedding

இந்த சம்பவத்தால் மணமகன் வீட்டார் செய்வதறியாது தவித்த நிலையில், மணமகன் சரவணனுக்கு போதை தெளிந்துள்ளது.

இதையடுத்து நடந்த நிகழ்வுகளை அறிந்த மணமகன்  சரவணன் “இனிமேல் குடிக்க மாட்டேன். பெண்ணை திருமணம் செய்துகொள்ளுகிறேன்” என காவல் நிலையத்திற்கு சென்று  மணமகளிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்துள்ளார்.

ஆனால் மணமகள் லட்சுமி இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். தலைக்கேறிய போதையால் திருமணம் நின்று போனதை அறிந்து தற்போது மணமகன் தடுமாறி நிற்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.