வேலூரில் கடையில் வாங்கி வந்த பொரித்த மீன் சாப்பிட்டு வாந்தி எடுத்த குழந்தைகளுக்கு மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து வாங்கிக்கொடுத்ததால், அந்த குழந்தைகள் இரண்டு பேரும் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது.

வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அன்சர் - சுரையா தம்பதி. இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் ஆஃப்ரின் என்ற குழந்தையும், 3 வயதில் அசன் என்ற குழந்தையும் இருந்தனர். 

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி பணிக்கு சென்று வீடு திரும்பிய ஆட்டோ ஓட்டுநரான அன்சர், கடையில் இருந்து பொரித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பொரித்த மீனை சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் இருவரும் முட்டையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

பொரித்த மீன் மற்றும் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் இருவருக்கும் 11 மணிக்கு மேல் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலையில் ஆஃப்ரினையும், அசனையும் தர்ஹாவுக்கு அழைத்துச் சென்று அன்சர் தாயத்து கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது,

அதற்குப் பிறகும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரி ஆகாததால் அருகில் இருந்த மருந்து கடையில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி மாத்திரையும், டானிக்கும் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த மாத்திரை மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகள் இருவரும் மயங்கி, சுயநினைவை இழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. 

இதன்பின்னரே தனது ஆட்டோவிலேயே குழந்தைகள் இருவரையும் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அன்சர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

பெற்ற குழந்தைகள் சடலங்களாக கிடப்பதை கண்டு, அவர்களது தாய் பரிதவிக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. பொரித்த மீன் சாப்பிட்ட பிறகே குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உணவுப் பொருள் சாப்பிட்ட 6 மணி நேரத்திற்குள் வாந்தியும், அதன்பின் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டால் அது நிச்சயம் ஃபுட் பாய்சன் என்கிறார்கள் மருத்துவர்கள்.

vellore children death

இதைத் தொடர்ந்து தற்போது குழந்தைகள் இருவரின் உடலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், “உடற்கூராய்வுக்கு பின்னர்தான் குழந்தைகளின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றார்.

தொடர்ந்து ஃபுட் பாய்சன் குறித்து அவர் பேசுகையில், “அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக மாறும் அபாயம் அதிகம். இப்படி உணவு ஒத்துக்கொள்ளாமல் போகையில், உடலில் பொட்டாசியம் அளவு குறைவதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. 
ஆகவே ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், அவர்கள் அலட்சியமின்றி மருத்துவரை சந்திக்கவும். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையை அணுகவும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகள் இருவரும் வசிக்கும் வீட்டுப் பகுதியான கஸ்பா பஜார் பகுதியில் வீடுவீடாக குடிநீர் மாதிரிகளை எடுத்து சுகாதாரப் பணியாளார்கள் சோதனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.