ராஜ்பவனில் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை இன்று புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு அரசு,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள். மனித நேய மக்கள் கட்சி  மற்றும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது.   

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாமதம் செய்து வருவதாக, தமிழக அரசும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15-ம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது நீட் தேர்வு விலக்கு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த வித பதிலும் அளிக்காத காரணத்தால், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூரியதாவது: நீட் மசோதவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக் குறியாகியுள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க எந்தவித கால வரம்பையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். முதல்வரிடம் ஒப்புதல் அளித்தபடி ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சட்டப்பேரவையின் மாண்பு, ஏழை எளிய மக்களின் உணர்வு, கிராமப்புற மாணவர்களின் கனவு இவற்றை பிரதிபலிக்கும் இந்த மசோதாவைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது வருத்தத்தை தருகிறது. எனவே ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் தமிழக அரசு கலந்து கொள்ள இயலாது” என்று அவர் கூறினார்

மேலும் இதன் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் புத்தாண்டையொட்டி  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும்  தேநீர் விருந்தில்  பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்படுவது,   தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருப்பது,  தமிழக பல்கலைக்கழகளில்  அரசின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக பேசி வருவது போன்றவற்றை தொடர்ச்சியாக ஆளுநர் செய்து வருகிறார்.  இதனால் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை மனிதநேய மக்கள் கட்சி புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  

இதனைத்தொடர்ந்து கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசனும் அறிவித்திருக்கிறார். அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும், தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலி கூத்தாக இருப்பதாகவும், ஆளுநரின் விருந்தை  புறக்கணிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக தெரிகிறது.