உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது.

கடந்த இரண்டு ஆண்களாக கொரோனாவினால் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும், திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்தது. மேலும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் அனைவர்க்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது மேலும் கொரோனா தளர்வுகளும் தமிழ்நாடு அரசு நீக்கியது. 

இந்நிலையில் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது.

அதனைத்தொடர்ந்து மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று நடக்கிறது. கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடக்கிறது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மேலும் தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் மிதுன லக்னத்தில்  நடந்தது. 

தொடர்ந்து திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்புத்தாண்டு, சித்திரை திருநாள், திருக்கல்யாண நிகழ்வு என்பதால் மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் திருவிழா நடைபெறுவதால் மக்கள் உற்சாகத்தில் குடும்பத்தாரோடு திருவிழாவை கண்டுகளிக்கின்றனர்.