திருமணமான சில மாதங்களில் மூன்று மாத கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் விருதுநகரில் அரங்கேறியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாருகாபுரத்தை சேர்ந்தவர் ஜான் பாண்டியன். இவருக்கும் நல்லான் பட்டியை சேர்ந்த முருகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகலட்சுமி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.  கடந்த 10-ம் தேதி கணவர் இல்லத்தில் மர்மமான முறையில் முருகலட்சுமி இறந்து கிடந்துள்ளார்.  முருகலட்சுமி தீ விபத்தில் உயிரிழந்ததாக ஜான்பாண்டியன் குடும்பத்தினர் காவல்துறைக்கும், பெண் வீட்டாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருக லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே முருகலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர் . முருக லட்சுமியை  அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அடித்து கொலை செய்து, உடலை தீ வைத்து எரித்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  

மேலும் அதனைத்தொடர்ந்து  முருகலட்சுமியின் தாய் மற்றும் அண்ணன் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இதுகுறித்து மனு அளித்துள்ளனர். திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் முருகலட்சுமி இறந்திருப்பதால் வழக்கு விசாரணை சாத்தூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  இதனால் முருகலட்சுமி  மரணம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.