சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.  சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் தெரிய வந்துள்ளன.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. மேலும் இந்த நிலையில் தமிழக சுகாதார செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.  அதே சமயம் சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் தொடர்ந்து கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி.யில் நாளைக்குள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.   நாளை முதல் குணமடைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஒருவார காலமாக அதன் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம்   2,483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.   இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா தொற்றுக்கு 39   பலியாகியுள்ளனர். 

மேலும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,23,693 ஆக அதிகரித்துள்ளது.  இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2563 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில்,  கொரோனாவிலிருந்து மொத்தம்  குணமடைந்தோர் எண்ணிக்கை 4, 25, 28,126 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 16,980 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிரான ஆயுதமாக பார்க்கப்படும் தடுப்பூசியானது இதுவரை 188.40 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 4-ம் அலை ஜூன் மாதம் ஏற்படக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்த நிலையில் மக்கள், அலட்சியம் காட்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.