மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி , ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்து தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக  வலம் வந்தவர் நடிகர் விவேக். இயற்கையை போற்றும்  குணம்  கொண்ட அவர், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார். தனது நகைச்சுவை மூலம் சமூக கருத்துக்களை பேசி  மக்களை சிந்திக்கவும் வைத்து வந்த விவேக், நடிப்பை தாண்டி பல சமூகப் பணிகளையும் செய்திருக்கிறார்.  தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, இளைஞர்கள் அதிகளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தி வந்தார். 

அதனைத்தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் சின்னக் கலைவாணர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டு வந்த விவேக்,  கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார். அவரது ஒரு வருட நினைவஞ்சலி சமீபத்தில் தான்  அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடிகர் விவேக்கின் மனைவி அருட்செல்வி, தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.  தன் மகள் அமிர்தாநந்தினியுடன் வந்திருந்த அவர், முதல்வரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அதில் விருகம்பாக்கத்தில்  நடிகர் விவேக் அவர்கள் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு  அவரது  பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை  வைத்திருக்கிறார்.   இந்த சந்திப்பின்போது   விவேக் பசுமை இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.