பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபர்த்தி தான் சுஷாந்துக்கு அதிக போதை மருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சுஷாந்தின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாகப் போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ரியாவை விசாரணை நடத்தி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பிறகு அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ஷ்ரத்தா கபூர். ரகுல் ப்ரீத் சிங். சாரா அலிகான் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக நடிகை தீபிகா படுகோனேவிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்தி நடிகர் ஒருவரிடமும் விசாரணை நடந்தது. 

பியாரி இஷ்க் அவுர் மொஹ் பாத் படத்தில் கடந்த 2001ம் ஆண்டு அறிமுகமாகி முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது பெற்றவர் நடிகர் அர்ஜூன் ரான் ராம்பால். இவர் மோக்‌ஷா, யாகீன், ஹவுஸ்ஃபுல், RaOne போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது நாஸ்டிக் உள்ளிட்ட 2 இந்தி படங்களில் நடிக்கிறார். 

ராம்பாலுக்கு போதை மருத்து விற்பவர்களுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் (NCB) கடந்த மாதம் சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது போதை மருத்து விவகாரத்துக்கும், போதை மருந்து விற்பவர்களுடனும் தனக்குத் தொடர்பு இல்லை என்று ராம் பால் தெரிவித்தார். 

இந்நிலையில் அவரது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் போதை தரும் மருந்தை உட்கொள்வதற்கான டாக்டர் பிரிஸ்கிர்ப்ஷ்ன் ஒன்றைக் கண்டெடுத்தனர். தற்போது அதன்பேரில் விசாரணை நடத்த அர்ஜூன் ராம்பாலை அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜூன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட டாக்டர் பிரிஷ்கிரிப்ஷன் போலியானது என்று கூறப்படுகிறது. அது நிரூபிக்கப்பட்டால் விசாரணையின் போது அர்ஜூன் ராம்பாலை கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

போதை மருந்து வழக்கில் கைதான ரியா சக்ரபர்த்தி ஒரு மாதத்துக்கும் மேலான சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமின் பெற்று வெளியில் வந்தார். அவருக்கு கோர்ட் வெளிநாடு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உள்ளது. நடிகைகள் தீபிகாபடுகோனே, ரகுல் ப்ரீத் போன்றவர்கள் ஒருமுறை விசாரணைக்குப் பிறகு, அழைக்கும்போது விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தற்போது ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர்.