ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வரஜ இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்துக்காகத் தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். இதன் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு. D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. 

இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட்டும் நடிக்கவுள்ளார். தனுஷுக்கு தங்கையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். பாடல்கள் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடன ஒத்திகையில் இறங்கியுள்ளார் தனுஷ். டான்ஸ் மாஸ்டர் ஜானி பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஜானி மாஸ்டர் கோரியோகிராபியில் ரவுடி பேபி பாடல் உருவாகி மாபெரும் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்திற்கு பிறகு தனுஷ் 44 திரைப்படம் உள்ளது. இப்படத்தின் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஐந்து வருடங்களுக்கு பிறகு DNA காம்போ. அனிருத் ஆன் போர்ட் என்ற செய்தி வெளியானதும் கொண்டாட துவங்கிவிட்டனர் ரசிகர்கள். இதனைத் தொடர்ந்து ராம் குமார் இயக்கவிருக்கும் படத்திலும் தனுஷ் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.