நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மோகன்தாஸ். அந்த படத்தின் டீஸர் சென்ற மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதில் விஷ்ணு சைக்கோ கொலைகாரனாக காட்டப்பட்டு இருந்தார். மோகன்தாஸ் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீஸரில் ஒருவரை சுத்தியலால் அடித்து.. அடித்து.. பல முறை அடித்து.. கொலை செய்கிறார். அதன் பிறகு ரத்தம் சொட்ட சொட்ட அதே சுத்தியை தூக்கி சென்று கண்ணாடி முன்னர் நிற்கிறார். 

அங்கு சட்டையை கழற்றிவிட்டு ரத்தத்தை தன் உடம்பில் தேய்த்து கொண்டு, அதன் பிறகு சட்டையை அப்படியே எடுத்துச்சென்று வாஷிங் மெஷினில் துவைக்கிறார். இது உண்மை கதையாக இருக்கலாம் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இப்படி படு த்ரில்லிங்காக இருந்த அந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இன்னொரு ராட்சசன் படமாக இருக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் கமெண்ட் செய்தனர். விஷ்ணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தான் மோகன்தாஸ் படத்தை தயாரிக்கிறார். கொரோனா லாக்டவுனால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளது கூடுதல் தகவல். 

விஷ்ணு கைவசம் காடன் படம் உள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். ராணாவுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள காடு சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று காடன் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.