இங்கிலாந்தின் நாடிங்கம் நகரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர், தான் இறந்த பிறகு தனது உடலை க்ரையானிக்ஸ் நுட்பம் மூலம் பதப்படுத்தி வைக்க புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். 


இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில், இறந்தவர்களின் உடலை உறையவைத்து பதப்படுத்தும் விஞ்ஞானம் தான் க்ரையானிக்ஸ் நுட்பம். மருத்துவத்துறையில் அதிக ஆராய்ச்சி செய்யப்படும் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்று. 


 1963ம் ஆண்டில் முதன்முதலாக அமெரிக்காவில் இந்த க்ரையானிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ராபர்ட் என்பவர் தான் இந்த தொழில்நுட்பத்தின் தந்தை. 1967ல் இந்த தொழில்நுட்பத்தின் படி முதல் உடல் பதப்படுத்தப்பட்டது.  தற்போது உலகில் 7 க்ரையானிக்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அதில் அமெரிக்காவில் ALCOR என்ற நிறுவனமும், ரஷ்யாவிலுள்ள KRIORUS என்ற நிறுவனமும் பிரபலம் வாய்ந்தது.

cry3


விருப்பப்படுகிறவர்கள் இந்த நுட்பத்தின் மூலம் தான், இறந்தபின்பு உடலை பதப்படுத்திக்கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் மூலம் முழு உடலை பதப்படுத்தி வைக்க ஒன்றரை கோடி ரூபாய் கட்டணமும், மூளையை மட்டும் பதப்படுத்தி வைக்க 60 லட்ச ரூபாயும் கொடுத்து க்ரையானிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.


 இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்பவர்கள். நோய்வாய்ப்பட்டு மரணத்தை தழுவும் நேரத்தில், க்ரையானிக்ஸ் நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு , நிறுவன ஊழியர்கள் மருத்துவமனைக்கு விரைவார்கள். ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் இறந்து 15 நிமிடத்துக்குள், இறந்தவரின் மூளை செயலிழக்காமல் இருக்க தேவையான ஆக்சிஜனை வழங்குவர். பின்பு, இரத்தம் உறையாமல் இருக்க ஹெப்பானிஸ் என்ற வேதிதிரவமும் செலுத்தப்பட்டும், ஐஸ் கட்டிகள் நிறைந்த பெட்டியில் வைத்து, க்ரையானிக்ஸ் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.


அதன் பின்பு, உடலில் இருக்கும் இரத்தமும், வேதி திரவமும் வெளியே எடுக்கப்பட்டு, குறிப்பிட்ட சில வேதிபொருட்கள் உடலில் செலுத்தப்பட்டு, -96 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில், திரவ நைட்ரஜனுக்குள் பாதுகாக்கப்படும்.


ஆயிரம் வருடங்கள் ஆனாலும் உறைந்த நிலையிலேயே பாதுகாக்கப்படும். என்ன உடல்நல குறைவால் இறந்தார் என்ற நோய்களுக்கு மருந்துகண்டுபிடிக்கப்படும் போது, அந்த உடலை எடுத்து சிகிச்சை அளித்து உயிர்ப்பிக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உதாரணத்துக்கு, நுரையீரல் புற்றுநோயால் ஒருவர் இறந்து இருந்தால், எதிர்காலத்தில் இந்த நோய் குணமாக மருந்து கண்டுபிடிக்கப்படும் போது, அந்த உடலை எடுத்து நேனோ தொழில்நுட்பத்தின் மூலம் புது உறுப்பாக உருவாக்கப்பட்டு , பதப்படுத்தி வைத்திருந்த அந்த நபரின் உடலுக்கு மாற்றப்படும். 


மூளையில் இருக்கும் செல்களுக்கு தேவையான ஆக்சிஜனை செலுத்திக்கொண்டே இருப்பதனால், பழைய நினைவுகள் நிச்சயம் இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதுவரை 300க்கு மேற்ப்பட்டவர்களின் உடல்கள் பதப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு எதிரானது என்று இந்த நுட்பத்துக்கு எதிர்ப்புகள் ஒருபக்கம் எழுந்துகொண்டு தான் இருக்கிறது.


ஒரு வேளை இந்த தொழில்நுட்பம் வெற்றி அடைந்தால், மனித வரலாற்றின் தலைசிறந்த கண்டுபிடிப்பாக அமையும் என்பது உறுதி.