கடந்த 1992-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். 2002-ம் ஆண்டு ஆர்.கே.செல்வமணி - ரோஜா திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

நடிப்பைத் தாண்டி அரசியலில் நுழைந்த ரோஜா, 2014-ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஆந்திராவின் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2019-ம் ஆண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டாவது முறையாக அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரானார்.

தற்போது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக உள்ளார். 
கடந்த சில நாட்கள் முன்பு, தொகுதி மக்களை சந்தித்த ரோஜா, அங்கு நடந்த கபடி போட்டியில் கபடி விளையாடி அசத்தினார். 

இந்நிலையில் ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதுகுறித்து அவரது கணவரும், இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்திருப்பதாவது, என்னுடைய மனைவி ரோஜாவின் உடல்நிலை இப்போது பரவாயில்லை. அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. ஜனவரி மாதத்தில் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் இந்த தேர்தல் முடிந்ததும் செய்து கொள்ளலாம் என்றிருந்தோம். அதனால் பாதிப்பு அதிகமாகிவிட்டது. இறைவன் அருளாலும், எல்லோரது பிரார்த்தனைட்யாலும் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ரோஜா மாற்றப்பட்டிருக்கிறார். இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். தயவு செய்து மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.