“ஜெயிலுக்கு போயிட்டு வந்தால் தான் தமிழ்நாட்டில் பிரபலமாக முடியும்” என்று, பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக தான் எதிர் கட்சி என்றாலும், பல விசயங்களிலும், பாஜக தான், தமிழ்நாட்டின் எதிர் கட்சியைப் போல் செயல்பட்டு வருவதாக தொடர்ச்சியான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அத்துடன், பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்போது செய்தியாளர்களை சந்தித்ததாலும், அது சர்ச்சையாவதுடன், வைரலாவதும் வாடிக்கையாக உள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்தும், அந்த பகுதி மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும், பாஜக சார்பில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நாடு முழுவதும் அரசியல் ஒரு பக்கமாகவே சென்று கொண்டிருக்கிறது” என்று, குறிப்பிட்டார். 

“இந்திய சரித்திரத்தில் இல்லாத அளவிற்கு கிறிஸ்தவர்கள் மிகுந்த மாநிலங்களில் தற்போது பாஜக வெற்றி பெற்று உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார். 

“கடந்த 8 ஆண்டுகள் ஆகியும் மோடியின் ஆட்சி மீது, மக்களுக்கு சலிப்பு ஏற்படவில்லை என்றும், ஆனால் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி எப்போது முடியும் என மக்கள் விரும்புகின்றனர்” என்றும், திரியை கொழுத்திப் போட்டார்.

அத்துடன், “தமிழகத்தில் தற்போது 12,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், மேலும் 7,500 மெகாவாட் மின்சாரம் மத்திய அரசு வழங்குகிறது” என்றும் குறிப்பிட்ட அண்ணாமலை, “இதில் 5 சதவீதம் மட்டுமே மத்திய அரசு குறைத்து உள்ளது” என்றும், சுட்டிக்காட்டினார். 

“இந்த நிலையில் தான், மத்திய அரசு மின்சாரம் வழங்காததால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு என முதலமைச்சர் வேடிக்கையாக பேசுகிறார்” என்றும், அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மேலும், “தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, வெளி மார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்கி அதில் ஊழல் செய்ய திமுக அரசு முயற்சிக்கிறது” என்றும், அண்ணாமலை குற்றம்சாட்டினார். 

“எதை எல்லாம் பார்க்க முடியாதோ, அதில் எல்லாம் திமுக விஞ்ஞான முறையில் ஊழல் செய்கிறது” என்றும், அண்ணாமலை மிக கடுமையாகவே விமர்சித்தார்.

“பெட்ரோலுக்கு மாற்றாக இ வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது” என்றும், அவர் கூறினார். 

அதே போல், “டாஸ்மாக்கை வைத்து தான் தமிழக அரசு நிர்வாகம் செய்கிறது என்றும், டாஸ்மாக்கை மூடினால் அரசு அலுவலர்கள் யாருக்கும் தமிழக அரசால் அடுத்த மாதம் சம்பளம் வழங்க முடியாது என்றும், டாஸ்மாக்கை மூட வேண்டும் என ஏற்கனவே ஒருநாள் உண்ணாவிரதம் இருந்த முதல்வர் மு.க. ஸ்டாலினால் தற்போது முதலமைச்சராக இருந்தும் கூட, தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட முடியாது” என்றும், விமர்சித்தார்.

குறிப்பாக, திமுவின் ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது என்றும், சமூக நீதி என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாமல் திமுக இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

ஆனால், “உண்மையான சமூக நீதிக்கு பாஜகதான் எடுத்துக்காட்டு” என்றும், அண்ணாமலை கூறினார். 

“திமுகவில் வாரிசு அரசியல் மட்டுமே நடக்கும் போது, சமூக நீதியை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

“மோடிக்கு பிறகு அவரது வாரிசு யாரும் பிரதமர் பதவிக்கு வரப்போவதில்லை” என்றும், அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ள பாஜக பிரமுகர் அருள் பிரகாஷ்க்கு மேடையில் சால்வை அணிவித்து அண்ணாமலை, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

அப்போது, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, “ஜெயிலுக்கு போயிட்டு வந்தால் தான், தமிழகத்தில் பிரபலமாக முடியும் என்றும், மிசாவை பார்த்து பயப்படாத ஸ்டாலின், சமூக வலைத்தளத்திற்கு பயப்படுகிறார்” என்றும், சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அண்ணாமலை பேசியது, தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.