தமிழக ஆளுநருக்கு எதிராக நடந்த கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரம் குறித்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்து உள்ளார்.

“தருமபுரி ஆதின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றால் போராட்டம் நடத்தப்படுவது உறுதி” என்று, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்றாக சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்க்கொடி தூக்கி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால்,“தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலானது, இங்கு உள்ள எதிர் கட்சியைத் தாண்டி தமிழக அரசுக்கும் - ஆளுநருக்குமான மோதலாக மாறியிருக்கிறது” என்று, விமர்சிக்கப்பட்டு வந்தது.

எனினும், இதனைப் பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாத தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றைய சுற்றுப் பயணம் மேற்கொண்டு, திருக்கடையூர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஆளுநர் ஆர்.என்.ரவி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு வருகை தந்துார். 

அப்போது, ஆளுநரின் கார், மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி எதிரில் சென்ற போது, அங்கு ஏற்கனவே திரண்டு வந்து நின்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஒன்று திரண்டு, தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எனினும், ஆளுநரின் பார்வையில் போராட்டக்காரர்கள் யாரும் படாத வகையில், போலீசார் வாகனத்தை கொண்டு வந்து வித்தியாசமான முறையில் மறைத்து நிறுத்தினர். இதனால், போராட்டக்காரர்கள் கருப்பு கொடியை சாலையில் தூக்கி எறிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனால்? போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அப்போது பெரும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தான், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்து, கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தது. 

இது தொடர்பாக, சட்டசபையில் இன்று அதிமுக கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வந்த நிலையில், அதிமுக வெளிநடப்பும் செய்தது. 

இதனைத் தொடர்ந்து, ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாகவும், ஆளுநரின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாகவும் இன்றைய தினம் சட்ட சபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

அந்த விளக்கத்தில், “ஆளுநர் தருமபுரம் ஆதினத்தை சந்திக்க திருக்கடையூர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி நேற்று தெளிவாக அறிக்கை வெளியிட்டார். அதை, நீங்கள் ஊடகத்தில் பார்த்திருக்கலாம்” என்று, குறிப்பிட்டார்.

“ஆனாலும், கூடுதல் டிஜிபி யின் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒன்றை நான் இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு பேசிய முதல்வர், “இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கல், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும், போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தனர் என்றும், அதன் பின்னர் அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர்” என்றும், சுட்டிக்காட்டினார்.

அத்துடன், “வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்பு கொடி வீசி எறிந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை என்பதை மிகத் தெளிவாக காவல்த் துறை கூடுதல் இயக்குநர் வெளிப்படுத்தி உள்ளார்” என்றும், முதல்வர் சுட்டிக்காட்டினார்.

“ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபி க்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் என்றும், அதில் அவர் கடைசியாக குறிப்பிட்டிருப்பது என்னனென்றால், அதிர்ஷ்டவசமாக ஆளுநர், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்களோ, கொடிகளோ மற்ற எந்த பொருட்களாலோ பாதிக்கப்படாமல் போலீசாரால் பாதுகாக்கப்பட்டது” என்று, குறிப்பிட்டு உள்ளார்” என்றும், முதல்வர் எடுத்துக்கூறினார்.

“போராட்டம் நடத்தியவர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், இவற்றுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது” என்றும், முதல்வர் விளக்கம் அளித்தார்.

“ஆளுநரின் பயணம் பாதுகாப்பாக இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்பட்டன என்பது அபாண்டமான குற்றச்சாட்டு என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் என்பதே உண்மை” என்றும், முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கூறி உள்ளார்.

“ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்பதை நான் உறுதியோடு இந்த அவையில் பதிவு செய்கிறேன்” என்றும், முதல்வர் கூறினார். 

குறிப்பாக, “ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு, மிகவும் பாதுகாப்பாக எங்கள் அரசு அழைத்து சென்றிருக்கிறது என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றும், முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.  

முக்கியமாக, “அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களை காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட இந்த அரசுக்கு பொறுப்பு இருக்கிறது என்றும், அந்த கடமையை காவல்துறை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவாகவே விளக்கம் அளித்தார்.