பொதுக்குழுவில் இருந்து ஓபிஎஸ் கோபமாக வெளியேறிய நிலையில், “ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று, தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே ஏற்பட்ட கடும் மோதலுக்கு மத்தியில் தான், இன்றைய தினம் அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது. 

அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 
நடைபெற்றது. 

அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக் குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. என்றாலும், அங்கு நிலவும் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அகட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் இன்றைய தினம் அங்கு கொண்டு வரப்படவில்லை. 

மேலும், “இன்றைய பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாது என்றும், ஒற்றைத் தலைமை குறித்து மட்டுமே விவாதம் நடைபெறும்” என்று, சக உறுப்பினர்களும் ஓபிஎஸ் மேடையில் இருக்கும் போதே அறிவித்தனர். இந்த முடிவை எடப்பாடி பழனிசாமியே எடுத்தார் என்றும் கூறப்படுகிறது. 

அதன்படி, அதிமுக பொதுக்குழுவில் கிட்டதட்ட “அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுக் குழுவின் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு” உள்ளன.

அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் புதிய அவைத் தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உரையாற்றும் போது, ஓ.பி.எஸ் பெயரை மறந்துகூட எங்கும் குறிப்பிடவில்லை. அவர் இபிஎஸ் பெயரை மட்டுமே குறிப்பிட்டு பேசினார்.

அதே நேரத்தில், பொதுக்குழு தொடங்கும் முன்பாக, மேடையில் அமர்ந்திருந்த வைத்திலிங்கத்தைப் பார்த்து கீழே இருந்த சக அதிமுக தொண்டர்கள், வைத்திலிங்கத்தை நோக்கி பார்த்து ”துரோகி” என்று முழங்கினர். இதனால், பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கம் கீழே இறங்கிச் சென்றவர், திடீரென்று மேடைக்கு வந்து மைக் பிடித்து பேசிய வைத்திலிங்கம், “சட்டத்துக்கு புறம்பான பொதுக் குழுவை நிராகரிப்பதாக” எல்லோர் முன்பும் அந்த மேடையில் கோஷமிட்டார்.

குறிப்பாக, வைத்திலிங்கம் மைக் பிடித்து பேசத் தொடங்கியதும், அவரை யாரும் தடுத்துவிடக்கூடாது அல்லது அவரை யாரும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக, ஓபிஎஸ் அவரது அருகில் வந்து நின்று, பாதுகாப்பு அரண்போல வந்து நின்றார். 

வைத்திலிங்கம் ஆவேசமாக பேசி முடித்தும், அங்கிருந்து கோபமாக வெளியேறிய நிலையில், அவரைத் தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வமும் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வரிசையாக அந்த பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.

இதனால், அதிமுக பொதுக்குழுவில் பெரும் பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டது. அதே நேரத்தில், கீழே இருந்த  எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், ஒ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அங்கு இன்னும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அப்போது, மீண்டும் மைக் பிடித்து பேசிய  புதிய அவைத் தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன், “ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும்” என்று, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.