இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ், தற்போது 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 

குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

இதையடுத்து இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 

அதிலும் எச்சரிக்கை பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டு, அதில் நெகட்டிவ் இருந்தால் மட்டுமே வெளியே அனுப்பப்படுகிறார்கள்.

omicron india reaches 200

இத்தனை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஒமிக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் நுழைந்துவிட்டது. 

கடந்த 2 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி உள்ளது.  

இதையடுத்து நாடு முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. 

இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

omicron india reaches 200
 
இதன்படி மராட்டிய மாநிலம் - 54, டெல்லி - 54, தெலங்கானா - 20, கர்நாடகா - 19, ராஜஸ்தான் - 18, , கேரளா - 15, குஜராத் - 14, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 1, சண்டிகர் - 1, மேற்கு வங்காளம் - 1, தமிழ்நாடு - 1 ஆகியோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 200 பேரில் 77 பேர் குணமடைந்து அல்லது வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். 

மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு லேசான ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 138.35 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. 

இதனிடையே கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸாக உள்-நாசி கோவிட்-19 தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட ஆய்வை நடத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் பாரத் பயோடெக் அனுமதி கோரியுள்ளது.