பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

MGR

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சி நிறுவன தலைவருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் 105-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆர். மாளிகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இன்று இனிப்பு வழங்கினர்.

எம்ஜிஆர் தமிழ் திரைப்பட நடிகராகவும்,1977 முதல் அவர் மரணிக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. சத்துணவு திட்டங்கள், விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி, மகளிருக்கு சேவை நிலையங்கள், இலவச சீருடை, இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை தமிழகத்திற்கு வகுத்து தந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ‘பாரத ரத்னா’ டாக்டர் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று  காலை 10 மணியளவில் சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார்.  அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும்  அனைவராலும் போற்றப்படுகிறது!” என்று ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.