“சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்” என்று, டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சசிகலா அதிமுகவில் இல்லாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் தனி கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டனர். இதனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதன் காரணமகா, கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக வெற்றிப் பெற்று, ஆட்சியை பிடித்தது.

இதனால், சசிகலா மீண்டும் அதிமுகவில் இணையும் முயற்சியாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தனது பெயருக்கு பின்னால் போட்டுக்கொண்டு, அதன் படி செயல்பட்டு வருகிறார். 

இப்படியான சூழலில் தான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் போது, “சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்று, கூறினார். 

அத்துடன், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், “அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்”  என்றும், ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

 “அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை” என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மாறுபட்ட இந்த கருத்து அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சூழலில் தான், அடுத்த சில நிமிடங்களில் சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில், “சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என ஓபிஎஸ் கூறினார் என்றும், சசிகலா அவரை சார்ந்தவர்களை எதிர்த்து தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார்” என்றும், சுட்டிகாட்டினார். 

“ சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்பதையும் ஜெயக்குமார் அப்போது சுட்டிக்காட்டினார். 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில், ஓ.பன்னீர் செல்வத்திற்காக பதிலாகவே பார்க்கப்படுவதால், இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “சசிகலா தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்” என்று, தெரிவித்து உள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் மேலும் பேசும் போது, “எப்போதும் நிதானமாக பேசும் ஓ.பன்னீர் செல்வம், இந்த முறையும் சரியான கருத்தையே கூறியிருக்கிறார்” என்று, அவரது கருத்துக்கு, தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.

அதே போல், “அதிமுகவை மீட்டெடுப்பதே எங்களது இலக்கு என்றும், இறுதி மூச்சு உள்ள வரை தொடர்ந்து நாங்கள் போராடுவோம்” என்றும், அவர் தெரிவித்தார். தற்போது, டிடிவி தினகரன் பேசியது அதிமுகவில் மீண்டும் பேசும் பொருளமாக மாறி உள்ளது.