“இனி தமிழக அரசுப் பள்ளிகள் எப்படியெல்லாம் செயல்படும்?” என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் திளக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணர்கள் இன்று பள்ளிக்கு வருகை தந்து உள்ளனர்.

- 1 ஆம் வகுப்பில் இருந்து 9 ஆம் வகுப்பு வரை புதிய மாணவர்கள் சேர்க்கையும் தற்போது பள்ளிகளில் தொடங்கி உள்ளன.

- இன்று முதல், அடுத்து வரும் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், உளவியல் ரீதியான வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அதன் பிறகு, அடுத்த வாரம் முதல் வழக்கமான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

- இலக்கிய மன்றம், சுற்றுச் சூழல் மன்றம், வினாடிவினா மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம், நுகர்வோர் மன்றம், தகவல் தொழில் நுட்ப மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம், வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், குழந்தை  உரிமைகள் பாதுகாப்பு மன்றம், நுண்கலை மன்றம், திரைப்பட மன்றம், இளம் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கம் என பிற மன்றங்களையும் அரசுப் பள்ளிகளில் உருவாக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- வாரத்தில் ஒரு நாள் நீதி போதனை பாடம் நடத்த வேண்டும்.

- நூலகச் செயல்பாடுகளையும் நடத்த வேண்டும்.

- மதிய உணவு இடைவேளை முடிந்த பிறகு மாணவர்கள் 20 நிமிட நேரம் செய்தித்தாள், புத்தகங்கள் வாசிக்க செய்ய வைக்க வேண்டும்.

- தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மணவர்களை தவறாமல் பங்கேற்க செய்ய வேண்டும்.

- பள்ளிகளில் கூட்டு உடற்பயிற்சி மேற்கொள்ள வைக்க வேண்டும்.

- இலக்கிய மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் சுமார் 15 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். 

- மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கவிமாமணி விருது வழங்கப்படும்.

- ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி, பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டமும் நடத்தி பெற்றோரிடம் மாணவர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.

- பாட வேளை அட்டவணையாக..

9.10   - 9.30       இறை வணக்க கூட்டம்
9.30   - 10.10     முதல் பாட வேளை
10.10 - 10.50   இரண்டாம் பாட வேளை
10.50 - 11.00   இடைவேளை
11.00 - 11.40   மூன்றாம் பாட வேளை
11.40 - 12.20   நான்காம் பாட வேளை
12.20 - 1.00     மதிய உணவு இடைவேளை
1.00   - 1.20      செய்தித்தாள், புத்தகம் வாசித்தல்
1.20   - 2.00      ஐந்தாம் பாட வேளை
2.00   - 2.40      ஆறாம் பாட வேளை
2.40   - 2.50      இடைவேளை
2.50   - 3.30      ஏழாம் பாட வேளை
3.30   - 4.10     எட்டாம் பாட வேளை

என்று, இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் பள்ளிக் கல்வித்துறை தற்போது வெளியிட்டு உள்ளது.

இதனிடையே, “துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக டிவீட் செய்து உள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச் சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ -  மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.