“தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, நம்மையும் காத்து, நாட்டு மக்களையும் காப்போம்” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனாவின் 2 அலையானது கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டாலும், உயிர் இழப்புகள் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், மருத்துவத் துறையே அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

இப்படியான சூழ்நிலையில், “முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாகத் தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழக மக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். 

அதில், பேசி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இது கொரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால், அனைவரும் மிகுந்த பாதுகாப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

“முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே சென்றாலும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்” என்று, அவர் வலியுறுத்தி உள்ளார்.

“தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மிக மிக அவசியமானது முகக்கவசம் என்றும், இந்த முகக்கவசம் இன்று மனிதர்களுக்கு உயிர் கவசமாக மாறியுள்ளது என்றும், இந்த முகக்கவசத்தை அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசத்தை முழுமையாக மூக்கு, வாயை மூடியிருக்கும் அளவுக்குப் போடுங்கள்” என்றும், முதலமைச்சர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அத்துடன், “மருத்துவர்கள் இன்னொரு முக்கியமான தகவலையும் சொல்கின்றனர்” என்று சுட்டிக்காட்டி உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “ மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மருத்துவமனைகளுக்கு, பேருந்துகளில் பயணிக்கும் போது, தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பணியாற்றும் போது, 2 முகக்கவசங்களை அணிந்துகொள்வது நல்லது என்று கூறுகின்றனர்” என்பதையும் சுட்டிக்காட்டினார்.

“கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிக முக்கியமானது தடுப்பூசி” என்றும், முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார். 

“இது வரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசி பேட்டுக்கொள்ளங்கள் என்றும், நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் இருக்கிற மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான் என்றும், தடுப்பூசி போடுவதை தமிழக அரசு ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, “முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம். வரும்முன் காப்போம், கொரோனா இல்லா தமிழகம் அமைப்போம்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த வீடியோவில் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.