நடிகை குஷ்பு, வாக்கு கேட்டு செல்லும் போது ஓட்டலுக்குள் புகுந்து தோசை சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது, இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தல் திருவிழா களைக்கட்டி வருகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, பிரசாரம், வாக்கு சேகரிப்பு என திரும்பிய திசைகளில் எல்லாம் கோலாகலமாக காணப்படுகிறது. 

இப்படியாக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். 

பாஜகவில் இணைந்த குஷ்பு முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கி உள்ளதும், திமுகவின் கோட்டை என்று அழைக்கப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் டாக்டர் எழிலனை எதிர்த்துப் போட்டியிடுவதும் அரசியல் வட்டாரத்தில் சற்றே கவனம் ஈர்த்து உள்ளது. 

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்தே, நாள் தோறும் தீவிர வாக்கு சேகரிப்பில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அப்படி, ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வரும் குஷ்புவை, அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்தும், மேள தாளங்களோடும் சிறப்பாக வரவேற்று வருகின்றனர். அது மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், பெண்கள் ஆகியோரது ஆதரவும் குஷ்புவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

“வாக்களியுங்கள் தாமரைக்கு, வாய்ப்பளியுங்கள் உங்கள் சகோதரிக்கு” என கடும் வெயிலையும், கொரோனா தொற்றையும் கூட பொருட்படுத்தாமல் வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார் நடிகை குஷ்பு.

தற்போதைய அரசியல் களத்தில் வேட்பாளர்கள் பலரும், பல விதமாக வாக்கு சேகரிப்பதைப் போலவே, நடிகை குஷ்புவும் முதன் முறையாக உணவகம் ஒன்றில் தோசை சுட்டுக் கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட நுங்கம்பாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட குஷ்பு, அங்குள்ள தெற்கு மாட வீதியில் உள்ள சாலையோர உணவகம் ஒன்றில் உள்ளே நுழைந்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று அங்குள்ள தோசை கள்ளில் சும்மா மொறு, மொறு என்று, தோசை சுட்டுக் கொடுத்து, அந்த ஓட்டல் உரிமையாளர் மற்றும் அங்கு சாப்பிட வந்திருந்த வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்தி அசத்தினார். இதனையடுத்து, அங்கு சாப்பிட்ட வந்த வாடிக்கையாளர்கள் மற்றும் அந்த ஓட்டலில் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பல வருட அனுபவம் வாய்ந்த தோசை மாஸ்டர்களையே பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு சூடான கல்லில் தண்ணீர் தெளித்து, அளவாக மாவை எடுத்து மொறு, மொறுவென குஷ்பு தோசை சுட்டதை அப்பகுதி மக்கள் ஆவலுடன் கண்டு ரசித்தனர். குஷ்பு, சுட்ட தோசை தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.