எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது பாஜக புகார் அளித்துள்ள சம்பவம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக தேர்தல் நெருங்கும் நிலையில், முக்கிய தலைவர்கள் பலரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டாலும், மறுபக்கம் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும், திமுக கூட்டணிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் ஆதரித்தும், அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன் படி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், விளாத்திகுளத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய உதயநிதி, “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும் - பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, “அதைக் நான் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும் - பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இது தான்” எனக் கூறி, ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். 

அத்துடன், “இந்த செங்கல் தான் அவர்கள் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை” என்றும், பாஜகவை மிக கடுமையாக விமர்சனம் செய்தார். இது, இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த நிலையில், “உதயநிதி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடி விட்டதாக” அவர் மீது காவல் நிலையத்தில் பாஜக புகார் அளித்து உள்ளது. 

இது தொடர்பாக பாஜக நிர்வாகி நீதிபாண்டியன் கோவில்பட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019 ஆம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020 ஆம் தேதி அன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்க்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கலை திமுக வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்து உள்ளார். இந்த உண்மையை, அவரே 25.03.2021 அன்றைய தேதியில், விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்துள்ளார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி, தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். எனவே, சமூகம் காவல் ஆய்வாளர் அவர்கள் இந்த புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்க்குள்லிருந்து செங்கலை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், அதனை விளாத்திக்குளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்து உள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைப்பற்றி, சட்டப்படி தண்டனை பெற்றுத் தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” என்றும் அதில் கூறியிருக்கிறார். 

இந்த செய்தி, தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதே நேரத்தில், சிறுபிள்ளைத் தனமான இந்த புகாருக்கு இணையத்தில் பலரும் எதிர்மறையான விமர்சனங்களையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.