கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.

இந்நிலையில் அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள்  தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது.

மேலும் இதனிடையே தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். லாரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைபட்டது.

அதனைத்தொடர்ந்து போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று தி அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தனர். இதனால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது. இந்நிலையில் லாரி டிரைவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனட பிரதமர் ஜஸ்டின் டுருடோ நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980-ம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஆனால் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கபப்டவில்லை. அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.