தேர்வில் மதிப்பெண் குறைந்ததை தட்டி கேட்ட தாய், தந்தை, தம்பியை சிறுவன் ஒருவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்பெயின் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஸ்பெயின் நாட்டில் தென் கிழக்கு துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ள எல்சேக்கு பகுதியில், கடந்த செவ்வாய் கிழமை மாலையில் தான், இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது, எல்சே பகுதியில் கணவன் - மனைவி இருவர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 10 வயதில் ஒர ஆண் குழந்தையும், 15 வயதில் ஒரு ஆண் குழந்தைகளும் இருந்தனர். இந்த இரு சிறுவர்களும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

அத்துடன், இவர்களது வீடு அந்த பகுதியில் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்ததால், இந்த சிறுவர்களின் தந்தை, வேட்டையாடுவதற்காக,  துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

அந்த துப்பாக்கி எப்போதுமே வீட்டில் அவரது அறையில் தான் இருக்கும். அந்த துப்பாக்கியை பயன்படுத்துவது குறித்து, அவரது இரு மகன்களுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், அந்த 15 வயது சிறுவன் சரியாக படிக்காமல் இருந்து வந்திருக்கிறார். அத்துடன், பள்ளியில் சமீபத்தில் நடந்த தேர்விலும் மிக குறைவான மதிப்பெண் பெற்றிருக்கிறார்.

அந்த மார்க் சீட்டை பள்ளியில் இருந்து பெற்றுக்கொண்ட அந்த 15 வயது சிறுவன், தனது பெற்றோரிடம் கையெழுத்து வாங்குவதற்காக, வீட்டிற்கு எடுத்து வந்திருக்கிறார்.

அப்போது, கடந்த 11 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று, அந்த 15 வயது சிறுவன் தனது மார்க் சீட்டை தனது பெற்றோரிடம் காண்பித்து உள்ளார். மகன் பள்ளி தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர், அவனை கண்டித்து உள்ளனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த அந்த 15 வயது சிறுவன், தந்தையின் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி அம்மா, அப்பா, 10 வயது தம்பி என வீட்டில் இருந்து 3 பேரையும் சுட்டி கொன்று உள்ளான்.

இதனையடுத்து, சிறுவனின் தாயாரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லாத நிலையில், அந்த பெண்ணின் சகோதரி 3 நாட்கள் சென்ற நிலையில், இவர்களது வீட்டிற்கு நேரில் வந்திருக்கிறார்.

அப்போது, அந்த வீட்டில் அவரது சகோதரி, கணவர் மற்றும் 10 வயது சிறுவன் என அனைவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்து உள்ளனர். 

ஆனால், இவர்களது 15 வயது மகன் மட்டும் 3 சடங்களின் அருகில் உயிருடன் அங்கேயே அமர்ந்து இருந்து உள்ளான். 

“என்ன நடந்தது?” என்று, உயிரழந்த பெண்ணின் சகோதரி கேட்கவே, “எனது தந்தை, தாய் மற்றும் சகோதரனை நான் தான் கொன்றேன்” என்று, அந்த அந்த 15 வயது சிறுவன், அந்த பெண்ணிடம் கூறி உள்ளான். 

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அங்குள்ள போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற போலீசார், 3 நாட்களாக சடலங்களுடன் வீட்டில் தனியாக இருந்த அந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். 

அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், “சிறுவன், பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும், இதனால் தனது தாயுடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் இருந்த அனைவரையும் தந்தையின் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி கொன்றதாகவும்” கூறியுள்ளான். இதனையடுத்து, அந்த சிறுவனை போலீசார் சிறையில் அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் ஸ்பெயின் நாட்டில் பெரும் அதிர்ச்சியையம், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.