இதுவரை இல்லாத அளவிற்கு இந்த 2023 வருட பொங்கல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான தளபதி விஜயின் ஜில்லா மற்றும் அஜித் குமாரின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸான நிலையில், தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொங்கல் வெளியீடாக இருவரின் படங்களும் ரிலீஸாகின்றன.

இந்த 8 ஆண்டுகளில் இருவரின் திரையுலக வளர்ச்சியும் இமாலய வளர்ச்சியாக இருக்கிறது. வர்த்தக ரீதியாக மிகப்பெரிய உயரத்தை தொட்டிருக்கும் இவர்களது திரைப்படங்கள் ஒரே சமயத்தில் இந்த முறை ரிலீஸாவதால், தென்னிந்திய திரை உலகமே தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸை கவனிக்கப் போகிறது என்ன சொல்லலாம். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு, இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய படங்கள் வருகிற ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகின்றன.

இவை அனைத்திற்கும் மேல் இவர்கள் இருவரது ரசிகர்களுக்கு இடையிலான போட்டிகளும், வாதங்களும், உரசல்களும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெடித்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களின் ரிலீஸ் குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வகையில் பேசும் போது, “அஜித் சாரும் விஜய் சாரும் அற்புதமான நண்பர்கள் இருவரும் அவர்களது தளத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார்கள். 2 படங்களும் சூப்பர் படம். இரண்டு படங்களையுமே சந்தோஷமாக பாருங்கள். அப்படி தான் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு கட் அவுட் வைப்பதிலிருந்து பஞ்சாயத்தாக இருந்தால் எப்படி? இதை திட்டம் போட்டு இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வர வேண்டும் என்றெல்லாம் வரவில்லை. இருவரும் ஒரே நேரத்தில் வந்தால் என்ன மாதிரியான விஷயங்கள் வரும் என அவர்களுக்கும் தெரியும். இது சூழல் அது மாதிரி அமைத்துவிட்டது. இதை நாம் எவ்வளவு அழகாக ரசிகர்களிடம், இரண்டு படங்களையும் பாருங்கள் உங்கள் படத்தையும் பாருங்கள் இந்த படத்தையும் பாருங்கள் சந்தோஷமாக இருங்கள். பொங்கலை மிகவும் அழகாக கொண்டாடுங்கள். என்பதைத் தான் நாம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமே தவிர, அதுவா? இதுவா? முதலில் இதுவா? முதலில் அதுவா? என... இப்போது ஆளாளுக்கு ஒரு சேனல் வைத்திருக்கிறார்கள். பல பேர் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தால் என்ன செய்வார்கள் ரசிகர்கள் பாவம். நான் சொல்கிறேன் இரண்டு படங்களுமே அற்புதமான படங்கள். இரண்டு பேரின் ரசிகர்களும் சந்தோஷமாக படம் பாருங்கள், இரண்டு படமும் பாருங்கள். குடும்பத்தோடு பொங்கலை கொண்டாடுங்கள்” என சமுத்திரக்கனி அவர்கள் தெரிவித்துள்ளார். சமுத்திரக்கனியின் அட்டகாசமான அந்த முழு பேட்டி இதோ…