“தமிழக அரசு சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகையானது, எந்தெந்த மாணவிகளுக்கெல்லாம் கிடைக்கும்?” என்பதை தற்போது பார்க்கலாம்.

அதாவது, தமிழகத்தில் “தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டமானது, உயர் கல்வி உறுதி திட்டமாக” பெயர் மாற்றப்பட்டு உள்ளது. 

இந்த திட்டத்தின் அடிப்படையில், “6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக், ஐடிஐயில் சேர்ந்து படிக்கும் போது, அந்த மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்” என்று, தமிழக அரசு சமீபத்தில் ஒரு அதிரடியான திட்டத்தை அறிவித்திருந்தது. 

அதன் தொடர்ச்சியாக, “தமிழம் முழுவதும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டதும் முதலாமாண்டு மாணவிகளுக்கு 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்” என்று, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியிருந்தார்.

அதன்படியே, தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பெயர் பதிவு செய்ய நேற்று முன் தினம் முதல், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இந்த முகாம்கள் மூலமாக தகுதியான மாணவிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன், தமிழக அரசு வழக்கும் ஆயிரம் ரூபாயை பெற, தகுதியான மாணவியரின் விவரங்களை “ https://penkalvi.tn.gov.in ” என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்று, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு முன்னதாக வெளியிட்டு உள்ளது. 

இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, 

- தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படித்து, பிறகு அரசு பள்ளியில் படித்தவர்களும் பயன் பெறலாம் என்று, தமிழக அரசு கூறியுள்ளது.

- அதாவது, தமிழக அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் நிதியுதவி ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 

- இளநிலை, தொழிற்கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். 

- இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 

- மாணவிகள் ஏற்கனவே வேறு திட்டத்தில் பயன் பெற்று வந்தாலும், இத்திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும் என்றும், தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. 

-  2022-23 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பில் புதிதாக சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயணடைய, “ https://penkalvi.tn.gov.in ” என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், தெளிவாக கூறப்பட்டு உள்ளது.

- கல்லூரிகளில் முதலாமாண்டு முடித்து 2 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும், 2 ஆம் ஆண்டில் இருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

-  தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியருக்கு இந்த நிதியுதவி திட்டம் பொருந்தாது என்றும் கூறப்பட்டு உள்ளது.

- 2021-22 ஆம் கல்வியாண்டில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் இந்த திட்டத்தில் பயனடைய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- மாதம் 1000 ரூபாய் பெரும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 14417 என்ற கட்டணமில்லா எண்ணை மாணவிகள் தொடர்பு கொள்ளலாம் என்றும், தமிழக அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.