தமிழ்நாட்டில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களில் நேற்று ஒரே நாளில் 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், கிட்டதட்ட 28 மாணவ மாணிவகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய தினம் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், வேலூர் மாவட்டம் கடைசி இடமும் பெற்றது.

அதன்படி, ஸ்ரீதமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில், இவர்களில் கிட்டதட்ட 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் என்பது 93.76 சதவீதமாகும்.

அதே போல், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் வெளியானதில், ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100 க்கு 100 எடுத்து சாதனை படைத்திருந்தார்.

அத்துடன், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9,12,620 பேர் எழுதியிருந்த நிலையில், இவர்களில் 90.07 சதவீதம் மாணவர்கள் தற்போது தேர்ச்சி பெற்றனர். 

அதன்படி, 10 ஆம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 4,52,499 மாணவிகளும் 4,60,120 மாணவர்களும், 3 ஆம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் தேர்ச்சி பெற்றார்கள்.

இந்த நிலையில் தான், பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி ஆலோசனைகளை வழங்க கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படும் சூழலில், “10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த எதிரொலியாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கிட்டதட்ட 11 பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக” தமிழக கல்வித் துறை தகவல் கூறியுள்ளது.

மேலும், “தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவர்களில் 10 பேர் அரசு பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் தனியார் பள்ளி மாணவன்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “தேர்வு தோல்வி எதிரொலியாக தமிழகம் முழுவதும் கிட்டதட்ட 28 மாணவ - மாணவிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டனர்” என்கிற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி உள்ளன.

இவர்களில், “அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் 16 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 12 பேரும் தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

“இந்த தற்கொலை சம்பவம் பெரும்பாலும் வட மாவட்டங்களில் நடந்து உள்ளது என்றும், அதன்படி சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர், அரியலூர், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்களில் தான், இந்த இந்த சம்பவங்கள் நடந்து உள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்து.

குறிப்பாக, “அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் கிட்டதட்ட 4 பேர் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர் என்றும், தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 28 மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்தும் கல்வித்துறை தொடர்ந்து தகவல்களை திரட்டி வருவதாகவும்” தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.