ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பினால் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வைரஸ், உலகமெங்கும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

OMICRON

கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பலமுறை உருமாற்றம் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஆல்ஃபா, டெல்டா, காமா, பீட்டா என உருமாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உருமாற்றம் கண்டுபிடிக்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமிக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து, செக்குடியரசு உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டவுடன் அந்நாட்டிலிருந்து வருவோருக்கு பயணக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் விதிக்கத் தொடங்கின. இந்தியாவிலும் எச்சரிக்கைப் பட்டியல் என அழைக்கப்படும் ஒமிக்ரான் பாதிப்பு நாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதை தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியதாவது:-
தற்போதைக்கு, தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக  இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது.

ஒமிக்ரான் ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம்.  இனி வரும் காலங்களில் இதன் வீரீயம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

மேலும் ஒமிக்ரான் அறிகுறிகள் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலி மற்றும் வலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு  கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். வாசனையின்மை/சுவை இழப்பு அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை. ஒமிக்ரான் பற்றிய  பயம் கொள்ள தேவையில்லை என்றார் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி.