“2 வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பணியில் உள்ள தமிழக அரசு ஊழியர்களுக்கு என்று ஏற்கனவே சில விதிமுறைகள் உண்டு. அதன் படியே, தமிழக அரசு பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

அதாவது, தமிழக அரசு ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு ஊதியம், விடுப்பு உள்ளிட்ட இன்னும் பிற சலுகைகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களுக்கான சில கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருந்து வருகின்றன. அதன் படி தான், பெரும்பாலன அரசு ஊழியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். 

ஆனால், “ஒரே ஒரு விசயத்தில் தமிழ்நாடு அரசாலேயே எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறும் சூழ்நிலைக்கு, அரசே தள்ளப்பட்டது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?” ஆம், அது தான் உண்மை.

அப்படி, முடிவு எடுக்க முடியாமல் தமிழக அரசே திணறியது ஒரே விசயம். இந்த விசயம் பற்றி யோசித்த தமிழக அரசு, தற்போது அதிரடியான ஒரு முடிவையும், அறிவித்து உள்ளது. அது, வேறொன்றுமில்லை, “அரசு பணியில் உள்ள அரசு ஊழியர்கள் 2 வது திருமணம் செய்தால், அவர்கள் மீது  துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு முன்னதாக வெளியிட்டுள்ள அரசாணையில், “கடந்த 1973 ஆம் ஆண்டு தமிழக அரசு பணியாளர் சட்ட விதியின் படி, பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும் போது, அவர்கள் 2 வது திருமணம் செய்தால் அது தண்டனைக்குரிய குற்றம்” என்று, குறிப்பிட்டு உள்ளது.

அத்துடன், “இதனை மீறி 2 வது திருமணம் செய்வோர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர் 2 வது திருமணம் செய்வது ஒழுக்கக் கேடானது என்றும், அரசு மரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்” என்றும், வன்மையாக கண்டித்து உள்ளது.

மேலும், “அரசு ஊழியர் 2 வது திருமணம் செய்வதால், சட்ட ரீதியாக முதல் மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைப்பதில்லை என்றும், தமிழக அரசு அலுவலகங்களில் பணி புரியும் அரசு ஊழியர்கள், அவர் பணியிலோ அல்லது விடுப்பிலோ அல்லது அயற்பணியில் இருப்பினும் தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளுக்கு உள்பட்டவர்களாவர்” என்றும், சுட்டிக்காட்டி உள்ளது.

“எனவே, கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், அவர்கள் செய்துகொள்ளும் மற்றொரு திருமணமானது, இந்திய தண்டணைச் சட்டம் 494 ஆம் பிரிவின் படி, தண்டனைக்குரிய குற்றம் என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் படி அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1937 - ன் படி, அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழக அரசின் இந்த எச்சரிக்கை, சக அரசு ஊழியர்கள் மத்தியில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.