5 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டர் வந்து தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட மகன்.

helicopter

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சுப்பையா.  இவரது மகன் சசிகுமார். திருப்பூரில் கம்பெனி வைத்து நடத்தி வரும் இவருக்கு  இதைத்தவிர அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன. கம்பெனி வேலை நிமித்தமாக இந்தோனிஷியா சென்றிருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 30-ம்தேதி தந்தை சுப்பையா உடல் நலக்குறைவால் இறந்து விட்டதாக சசிகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்தோனிஷியாவில் இருந்து விமானம் மூலம் சசிகுமார் துபாய் வந்தார். பின்னர் அங்கிருந்து பெங்களூருக்கு நேற்று வந்தடைந்தார். 

இந்நிலையில் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்பதால் பெங்களூரிலிருந்து ரூ.5 லட்சத்தில் வாடகைக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு நேற்று வந்தடைந்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்றார். அங்கு தந்தையின் இறுதி சடங்கில் சசிகுமார் கலந்து கொண்டார். 

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் வானிலை காரணமாக, ஹெலிகாப்டர் புறப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டர் பைலட் மற்றும் உதவியாளர் ஆகியோர் புதுக்கோட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.  இந்நிலையில் வானிலை சரியானதும் இன்று காலை ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

தந்தையின் இறுதி சடங்கிற்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்பதற்காக ஓடோடி வந்த மகனின் பாசத்தை ஊர்மக்கள் அனைவரும் கண்டு நெகிழ்ந்து போன சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.