“உக்ரைன் மீதான போர் ஏன்?” என்பது குறிதது, நாட்டு மக்கள் மத்தியில் தோன்றிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் விளக்கம் அளித்து எழுச்சி உரை ஆற்றி உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரானது இன்றுடன் 25 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இந்த போரில், கிட்டதட்ட 14,200 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக நேற்றைய தினம் உக்ரைன் அதிகாரிகள் தகவல்கள் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர்.

என்றாலும், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்றுடன் 25 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யா தனது பலத்தை ஒட்டுமொத்தமாக திரட்டி, தொடர்ச்சியாக உக்ரைனில் மிக கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது.

ரஷ்ய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்களின் பல இடங்களிலும் தீப்பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் நிலையில், உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளும் ரஷ்யா வசம் சென்று உள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளன.

இதனால், உக்ரைன் - ரஷ்யா இடையேயான இந்த போரை நிறுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் முயற்சித்த போதிலும், அது முற்றிலுமாக தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.  இந்த சூழலில் தான், “எங்கள் நாட்டில் ரஷ்யா, இனப்படுகொலை புரிந்து வருவதாக” உக்ரைன் மிக கடுமையாக குற்றஞ்சாட்டி இருந்தது.

இதன் காரணமாக, ரஷ்யா நாட்டு மக்களே, உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று, போர் கொடி தூக்கத் தொடங்கி உள்ளனர். இதனால், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு அந்நாட்டிலேயே கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தான், ரஷ்ய நாட்டு மக்கள் முன்பு இன்று தோன்றிய அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புடின், “உக்ரைன் மீது ஏன் தெரியுமா ரஷ்ய படைகள் வீரதீரத்துடன் போர் புரிகிறது?” என்பதற்கு பதில் அளிக்கும் வகையில் அவர் எழுச்சி உரை ஆற்றி உள்ளார்.

அதாவது, உக்ரைனில் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து 4 வது வாரமாக போர் புரிந்து வருகிறது. இந்த போரும் நின்றபாடில்லை. தொடர்ந்து நீடித்தே வருகிறது. 

இந்த நிலையில் தான், மாஸ்கோவில் உள்ள விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் இன்று திடீரென்று தோன்றிய அந்நாட்டு அதிபர் புடின், “உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு ரஷ்ய மக்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்து வருவதாக” பெருமையோடு குறிப்பிட்டு பேசினார்.

தனது நாட்டு மக்களிடம் தொடர்ந்து பேசிய புடின், “இது போன்ற ஒற்றுமை உணர்வு நீண்ட காலத்திற்கு பிறகு ரஷ்யாவில் தென்பட்டு உள்ளதாகவும்” அவர் பெருமிதம் கொண்டார்.

அத்துடன், “உண்மையான அன்பிற்காக உயிரை கொடுப்பது தொடர்பாக பைபிளில் கூறப்பட்டு உள்ள ஒரு வாசகத்திற்கு உதாரணமாக, உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் செயல்பாடு இருப்பதாகவும்” அதிபர் புடின் தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு தனது பாராட்டினை தெரிவித்தார்.

குறிப்பாக, “இனப்படுகொலையை தடுப்பதற்காக இந்த தாக்குதல் அவசியமாகி உள்ளதாகவும்” தனது நாட்டு மக்களிடம் புடின் விளக்கம் அளித்தார்.

“உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை, ரஷ்யா கைப்பற்றியதன் நினைவு கூரும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் தான்” அந்நாட்டு அதிபர் புடின் இப்படியாக தனது எழுச்சி உரையை ஆற்றியது குறிப்பிடத்தக்கது. 

புடின் பேசும் போது, அந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் சுமார் 2 லட்சம் பேர் திரண்டு நின்று, அதிபர் புடின் பேச்சை கேட்டதாக ரஷ்யாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ரஷ்யா அதிபர் புடின் பேசுவதற்காக, “இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், மாணவர்களும் தொழிலாளர்களும் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டதாகவும், சில சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டும்” முன்வைக்கப்பட்டு வருகிறது. 

முக்கியமாக, “அதிபர் புடின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது உரையானது திடீரென நடுவிலேயே நிறுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து அவரது பழைய காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது என்றும், இதற்கு தொழில் நுட்பக் கோளாறே முக்கிய காரணம்” என்றும், அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, “உக்ரைன் மீதான போர் ஏன்?” என்பது குறிதது, நாட்டு மக்கள் மத்தியில் தோன்றிய ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் விளக்கம் அளித்து எழுச்சி உரை ஆற்றிய செய்தியானது, உலக நாடுகள் இடையே பெரும் வைரலாகி வருகிறது.