இன்று தமிழக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இன்று தமிழக சட்டப் பேரவையில் வேளண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அவர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு, தமிழ்நாட்டிற்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழக வேளாண் பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள்

- இயற்கை வேளாண்மை மற்றும் விளை பொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்

- டிஜிட்டல் விவசாயத்திற்கு மாறும் தமிழ்நாடு. வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விவசாயிகளுக்கு விரைவான சேவை அளித்தல்.

- இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க, இயற்கை விவசாயம் செய்ய 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது

- மாற்றுப் பயிர் சாகுபடி மூலம் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி, பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது.

-  இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாத்தல்.

- அனைத்து வேளாண் சார்ந்த துறைத்திட்டங்களை ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த கிராம வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்தல்.

- ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட, விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குதல்.

- வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மரபுசார் ரகங்களை ஊக்குவித்தல்.

- பண்ணைக்குட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நீராதாரங்களை வலுப்படுத்தல்.

- சந்தை உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க உதவுதல்.

- கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை 3,204 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்துவதற்கு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு 132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

- இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு 71 கோடி ரூபாய் மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

- பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திட 2,546 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் இயக்கம் அமைக்கப்படுகிறது.

- இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படுகிறது.

- திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலம் அமைக்கப்படுகிறது.

- தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு இரண்டாவது மண்டலம் அமைக்கப்படுகிறது.

-  சிறுதானியங்களின் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள்.

-  சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு 152 கோடி ரூபாயில் நிதி உதவி.

- சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை 29.7 கோடி ரூபாயில் ஊக்குவித்தல்.

- 8 கோடி ரூபாயில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்

- விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி.

-  நீர்ப்பாசனத்தில் தானியங்குமயமாக்கலுக்கு நவீன இணையதள தொழில் நுட்பம் அறிமுகம்.

- மண் வள அட்டைகளுக்கான தமிழ் மண் வளம் இணையமுகப்பு அறிமுகம்.

-  வேளாண் விரிவாக்க மையங்ளில் பணமில்லா பரிவர்த்தனை.

- மயிலாடுதுறையில் புதிய மண் பரிசோதனை கூடம் அமைக்கப்படும்.

- உயர் மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க 5 கோடிரூபாய் நிதி.

- பூச்சி மற்றும் நோய் மேலாண்மைக்கான சிறப்பு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி.

- கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை. 

- கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 2,950 ரூபாய் ஒதுக்கீடு.

- கரும்பு சாகுபடிக்கு உதவி தொகை 10 கோடி ரூபாயாக உயர்வு.

- சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் மற்றும் தானியங்கி எடைகள் 4.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 30 கோடி ரூபாய் நிதி.

- தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக 27.51 கோடி ரூபாய் நிதி.

- பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு 25.9 கோடி ரூபாய் நிதி.

- தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு 10.25 கோடி ரூபாய் நிதி.

- உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி.

- காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க 2 கோடி ரூபாய் நிதி.

- பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் நிதி.

- பனை மேம்பாட்டிற்காக 2.65 கோடி ரூபாய் நிதி.

- பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க 150 கோடி ரூபாய் நிதி.

- முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள், 65.34 கோடி ரூபாய் நிதி 

- 145 சூரிய சக்தி உலர்த்திகள் 3 கோடி ரூபாய் நிதி.

- 50 உழவர் சந்தைகளை சீரமைக்க 15 கோடி ரூபாய் நிதி.

- 10 உழவர் சந்தைகளை புதிதாக அமைக்க 10 கோடி ரூபாய் நிதி.

- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.

- திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் 381 கோடி ரூபாயில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

- கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் 38 கிராமங்களில் அமைக்க 95 கோடி ரூபாய் நிதி.

- 3 கோடி ரூபாயில் 5 தொழில் கற்கும் சிறுமையங்கள் அமைக்கப்படும்.

- 295 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒக்கீடு.

- சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க 15 கோடி ரூபாய் நிதி.

- பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் வசதி அறிமுகம்.

- மாநில அளவிலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம் அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு வழி காட்டுதல் செய்யப்படும்.

- 6 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கட்டமைப்பு வசதிகளுக்கு 36 கோடி ரூபாய் நிதி.

- பெரம்பலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தருமபுரி, விருதுநகர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இரண்டாம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு 125.44 கோடி ரூபாய் நிதி.

- 60 ட்ரோன்களை வாங்குவதற்கும் பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கு 10.32 கோடி ரூபாய் நிதி.

- காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கிலோ மீட்டர் நீளம் உள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு 80 கோடி ரூபாய் நிதி.

- அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு 5 கோடி ரூபாய் நிதி.

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க தன்கேட்க்கோவிற்கு 5,157.56 கோடி ரூபாய் நிதி.

- ஊரக வளர்ச்சித் துறை மூலம் 1245.65 கோடி ரூபாயில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

- விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் 604.73 கோடி ரூபாய் செலவில் 2,750 கிலோ மீட்டர் நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்.

- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் மூன்று இலட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு 42.07 கோடி ரூபாய் நிதி.

- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க  30.56 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் MSME மூலமாக சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க 1.5 கோடி ரூபாய் வரை மூலதன மானியம் வழங்க ஏற்பாடுகள்.

- வேளாண் புத்தொழில் நிறுவனங்களின் வேளாண் வணிக ரீதியான முயற்சிகளுக்கு 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி.

- வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணிக்க ஏற்பாடு.

- இப்படியாக, புதிய வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை துறைக்கு மொத்தமாக 33,007.68 கோடிரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.