“தமிழ்நாடு டிஜிட்டல் விவசாயத்திற்கு மாற உள்ளதாகவும், இனி விதை முதல் விற்பனை வரை தனி செயலி அறிமுகம் செய்யப்படும்” என்றும், வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன் படி,
-  விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக 154 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது

- 8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படுகிறது.

- வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் வகையில் திட்டம் அமைப்பு.

- 60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 

- நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். 

-  பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்.

- மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க 381 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு 5,157 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

- கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

- 28.50 கோடி ரூபாயில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

- 27 கோடி ரூபாயில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்.

- 19 லட்சம் ஹெக்டேரில்,  32.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்.

- வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும் என்றும், இதன் மூலமாக விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.