மூதாட்டி வீட்டின் வாயிலில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து ஏபிவிபி நிர்வாகி டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது தொடர்பான வழக்கில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை ஏ.பி.வி.பி. அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் மருத்துவர் சுப்பையா. இவர், சென்னையில் கடந்த 2020 ஜூலை மாதத்தின்போது, ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வந்தார்.

அப்போது, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மூதாட்டி வீட்டின் முன்பு மருத்துவர் சுப்பையா சிறுநீர் கழித்தது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி வெளியாகின. இவை பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சுப்பையா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், மூதாட்டி வீட்டின் முன்பு சிறுநீர் கழித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மருத்துவர் சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.